பொங்கல் என்றதும் உங்களுக்கு என்னவெல்லாம் ஞாபகம் வரும்?
சர்க்கரைப் பொங்கல்!
கரும்பு!
ஜல்லிக்கட்டு!
காணும் பொங்கலன்று கிராமங்களில் நடத்தப்படும் மஞ்சள் நீராட்டம்!
நகரங்களில் குறிப்பாக நண்பர்களையும், உறவினர்களையும் காணும் பொங்கலில் காணும்பொருட்டு மெரினாவில் திரளும் லட்சக்கணக்கான மக்கள்! இத்யாதிகளுடன்...
பொங்கல் என்றதுமே மறவாமல் ஞாபகத்துக்கு வரக்கூடியது அதிகாலையில் அம்மாக்கள், சித்திக்கள், அத்தைகள், மற்றும் அக்காக்களால் வாசலை அடைத்துப் போடப்படும் கலர்ஃபுல்லான கோலங்களும்தான்.
முன்பெல்லாம் புள்ளி வைத்துப் போடப்படும் நெளி கோலங்கள் பிரசித்தம். ஆனால் இப்போது சித்திரக் கைத்திறன் மிக்க ரங்கோலிகள் வீட்டு முற்றங்கள்தோறும் வலிய ‘ஹலோ’ சொல்லிப் பிரியமாய்ப் புன்னகைக்கின்றன. கடந்து வந்த இத்தனை தை மாதங்களில் பொங்கல் பண்டிகையும், ரங்கோலியும் அத்தனை பாந்தமான நட்பாகிவிட்டன.
அந்த அழகான நட்பை முன்னிட்டு, அடடா... தைப்பொங்கல் வருகிறதே, இந்த மாதம் தினமணி இணையதளம் (www.dinamani.com) ஸ்பெஷலாக வாசகர்களுக்கு என்ன போட்டி வைக்கலாம் என்று யோசித்தபோது சட்டென்று வந்து குதித்தது இந்த ஐடியா! கடந்த மூன்று போட்டிகளிலும் வாசகர்களுடனான தொடர்பு என்பது வெறுமே மின்னஞ்சல் வரையில் மட்டுமே நீடித்திருந்தது. இந்தமுறை வாசகர்களை நாம் நேரில் சந்தித்தால் என்ன என்று தோன்றியதால் இந்தப் போட்டியை பொங்கல் ஸ்பெஷல் ரங்கோலி கோலப்போட்டியாகத் திட்டமிட்டோம்.
ஜனவரி 17 ஆம் நாள், சென்னை, விருகம்பாக்கம், சந்திரா மெட்ரோ மாலில் இருக்கும் ஐநாக்ஸ் திரையரங்க வளாகத்தில் தினமணி இணையதளம் சார்பாக ‘பொங்கலோ பொங்கல்’ கலர்ஃபுல் ரங்கோலி கோலப்போட்டி’ நடைபெறவிருக்கிறது. ஆகவே, போட்டிக்குப் போட்டியாகவும் ஆச்சு, தமிழர் பாரம்பரியத் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு வாசகர்களை நேரில் சந்தித்தது போலும் ஆச்சு.
பொங்கல் 14 ஆம் தேதி தானே, நீங்கள் போட்டியை 17 ஆம் தேதி வைத்துவிட்டு பொங்கலோ பொங்கல் சொன்னால் எப்படி?! என்று சிலருக்குத் தோன்றலாம். அதுவும்கூட வாசகர்கள் வசதிக்காகத்தான். பொங்கல் தினத்தன்று நம் இல்லத்தரசிகளுக்கு நிச்சயமாக வீட்டை விட்டு வெளியேற விருப்பமிருக்காது. கொண்டாட்ட வேலைகளில் அவர்களுக்கு மூச்சு விடக்கூட நேரமிருக்காது. அவர்களும் தங்களது வேலைப்பளுவில் இருந்து, விட்டு விடுதலையாக வேண்டும்தானே! அதற்காகத்தான் இந்த அவகாசம். வீட்டுப் பொங்கல் முடிந்து ரிலாக்ஸ் ஆனதும், இருக்கவே இருக்கிறது தினமணி இணையதளத்தின் பொங்கலோ பொங்கல்! இந்தப் பொங்கல் ஸ்பெஷல் ரங்கோலிப் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றால் கசக்குமா என்ன? கரும்பு தின்னக் கூலியா என்கிறீர்களா? அப்படியானால், உடனடியாகக் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களைத் துல்லியமாக வாசித்துவிட்டு ஜரூராகப் போட்டிக்குத் தயாராகுங்கள்.
போட்டியில் முதல் மூன்று இடங்களை வெல்பவர்களுக்கு தினமணி இணையதளம் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கத்தின் சிறப்புப் பரிசு மழை உண்டு!
போட்டியில் கலந்துகொள்ளும் வாசகர்கள் அனைவருக்கும் தினமணி இணையதளத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!