வாய்ப்பு நம்மைத் தவறவிட்டால் துரதிர்ஷ்டம்; வாய்ப்பை நாம் தவறவிட்டால் அது..?? திமிர்!

‘வாய்ப்பு' நம்மைத் தவறவிடுமானால் அது துரதிர்ஷ்டம். ‘வாய்ப்பை' நாம் தவறவிடுவோமேயானால், அது திமிர்.
வாய்ப்பு நம்மைத் தவறவிட்டால் துரதிர்ஷ்டம்; வாய்ப்பை நாம் தவறவிட்டால் அது..?? திமிர்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்றோடு முடிவடைந்தது. பிரான்ஸ், குரோஷியா அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த தருணத்தில் குரோஷிய அணியைப் பற்றிய ஒரு சிறிய தகவலை தெரிந்துகொள்வது அவசியம்.

‘வாய்ப்பு' என்ற சொக்கத் தங்கத்தை ‘ஈகோ' என்ற உரைகல்லில் உரைத்துப் பார்த்து ‘இது பித்தளை' என்று தூக்கியெறிந்த ஒருவரின் தவறான முடிவால், சரித்திரத்தில் தன் பெயரை பதிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் குரோஷிய வீரர் நிக்கோலா காலிநிக்.

குரோஷிய அணி உலக கோப்பை போட்டிக்குள் நுழைந்ததற்கு காரணமான முன்னணி வீரர் நிக்கோலா காலிநிக். மிகச் சிறந்த வீரர். குரோஷிய அணி தனது முதல் ஆட்டத்தில் நைஜீரிய அணியை சந்தித்தது. அந்த ஆட்டத்தில் நிக்கோலா காலிநிக் முதலில் களமிறக்கப்படவில்லை. ஆட்டம் முடிய ஐந்து நிமிடமே மீதமிருக்கும் போது, குரோஷிய பயிற்சியாளர் நிக்கோலா காலிநிக்'கை மாற்று வீரராக களமிறங்கும்படி கேட்டுக்கொண்டார். முதலிலேயே தன்னை களமிறக்காமல் போனது தனக்கிழைக்கப்பட்ட அவமானமாக நினைத்தார் காலிநிக். அதனால், களமிறங்க மறுத்துவிட்டார். இது ஒழுங்கீனமான செயல். பிரச்னை இத்தோடு முடியவில்லை. காலிநிக் செய்த இந்தத் தவறுக்காக பயிற்சியாளரிடம் ‘மன்னிப்பு கேட்க வேண்டும்', என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு காலிநிக் உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கிருந்து புறப்பட்ட காலிநிக் விடுமுறையை அனுபவிக்க சென்றுவிட்டார்.

குரோஷியாவை பொறுத்தவரை இந்த உலகக் கோப்பை சரித்திரப் புகழ் வாய்ந்தது. காரணம், அந்த அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது. இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இதில் கலந்துகொண்ட குரோஷிய வீரர்கள் அனைவரும் உலக கால்பந்தாட்ட சரித்திரத்தில் தங்கள் பெயரை இடம் பெறச் செய்துள்ளனர். காலிநிக் அந்தப் பட்டியலில் இல்லை.

காலிநிக் இப்படி ஒரு முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருந்தது அவருடைய ஈகோ. அதனால் விளைந்த கோபம். தற்போது காலி நிக் அதை நினைத்து வருந்துகிறாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. குரோஷிய கால்பந்து சாதனை புத்தகத்தில் காலிநிக் என்ற பக்கம் கிழிக்கப்பட்டு கசக்கி தூக்கியெறியப்பட்டுள்ளது. ஒருவேளை காலிநிக் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தால், ஆட்டத்தின் முடிவே மாறியிருக்குமோ?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு மரத்தடி. பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள். அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான்.

ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது.

‘நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்!' என்றான் அரசன்.

மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.

‘அரசே! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா?' என்று கேட்டான்.

‘இதென்ன பிரமாதம். நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன். மதியம் உணவுடன் சந்திக்கிறேன்', என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான்.
 

மதிய உணவை அரசன் கொண்டுவருவான். அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும். அதற்கு வசதியாக, காலையிலிருந்தே எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. அதிக பசியோடு இருந்தால் அதிகமாக சாப்பிடலாம்', என்று அவன் மனம் கணக்குப் போட்டது.

அடுத்த நாள் விடிந்தது. அரசனின் வருகைக்காக காத்திருந்தான். வழக்கம் போல் பலர் அவனுக்கு உணவு கொடுக்க முன் வந்தார்கள். அரசன் கொண்டுவரும் உணவு பற்றிய சிந்தனையால் மற்றவர்கள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டான். மதியம் மணி இரண்டானது, மூன்றானது அரசன் வரவேயில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இரவு எட்டு மணியானது. ஆள் நடமாட்டமே இல்லாமல் அந்த இடமே ஓய்ந்து போனது. கோபத்தோடும் பசியோடும் உட்கார்ந்திருந்தான் பார்வையற்றவன். அந்த நேரத்தில் அரசன் அங்கு வந்தான்.

‘தம்பி! எப்படி இருக்கிறாய்? அரண்மனை சாப்பாடு நன்றாக இருந்ததா? எங்கே பொற்காசு மூட்டை, எங்கே குதிரை?' என்று கேட்டான் அரசன்.

‘சாப்பாடா? காலையிலிருந்து பசியோடு காத்திருக்கிறேன். இப்போதுதானே நீங்களே வருகிறீர்கள்', என்றான் சோகமாக.

யோசித்தான் அரசன். பிறகு பேசினான்.

‘சாப்பாட்டுக் கூடையோடு கிளம்பினேன். திடீரென்று தலை சுற்றியது. வைத்தியர்கள் என்னை சோதித்துவிட்டு ஓய்வெடுக்குமாறு சொன்னார்கள். அதனால், என்னுடைய பாதுகாவலன் மூலமாக உணவை கொடுத்து அனுப்பினேன். அதை நீ சாப்பிடவில்லையா?' என்றவாறு பக்கத்தில் இருந்த பாதுகாவலனை விசாரித்தான்.

‘அரசே! இவரிடம் உணவை கொடுத்தேன். ஆனால், இவர் வாங்க மறுத்துவிட்டார். அதனால், அதை திரும்ப எடுத்துச் செல்வதைவிட யாரிடமாவது கொடுத்தால் உபயோகமாக இருக்குமே என்று நினைத்து பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் கொடுத்துவிட்டு அரண்மனை திரும்பினேன். உங்களிடம் விஷயத்தை தெரிவிப்பதற்காக வந்தேன். நீங்கள் ஓய்வில் இருந்தீர்கள். அரசியாரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்', என்றான் பாதுகாவலன்.

தலையில் கைவைத்தபடி அமர்ந்தான் அரசன். அப்போது அங்கிருந்த சாது பேசினார்.
‘தம்பி! நடந்த விவரங்களை என்னால் யூகிக்க முடிகிறது. அரசன் சாப்பிடும் உணவை கேட்டாய். ‘தானே நேரில் வந்து கொடுக்கிறேன்', என்று சொன்னது அரசனின் பெருந்தன்மை. ஆனால், அரசன் வந்து நேரில் கொடுத்தால் மட்டுமே அது அரச உணவு என்று நீ நினைத்தாய். அதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கு காரணம். இதுவரை நடந்தது மட்டுமே உனக்குத் தெரியும். இதற்கு மேலும் பல விஷயங்கள் நடந்துள்ளது', என்று சொல்லிவிட்டு அமைதியானார் சாது.

அந்த இடமே அமைதியானது. சாது மீண்டும் பேசத்தொடங்கினார்.

‘உணவை கொடுத்து அனுப்பிய அரசன் இரண்டாவது பாதுகாவலனை அழைத்தான். ஆயிரம் பொற்காசுகளை ஒரு மூட்டையாக கட்டி, ‘மரத்தடியில் அரச உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் இந்த மூட்டையை ஒப்படைத்துவிட்டு வா', என்று அனுப்பினார். இரண்டாவது காவலன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உனது நண்பனிடம் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்துவிட்டு நகர்ந்தான். அந்த பொற்காசு உனக்காக கொடுக்கப்பட்டது. குழப்பம் இதோடு தீரவில்லை. அரசன் மூன்றாவதாக ஒரு காவலனை அழைத்தான். அவனிடம் ஒரு குதிரையை கொடுத்து, மரத்தடியில் பொற்காசு மூட்டையுடன் இருப்பவனிடம் குதிரையை கொடுக்கும் படி அனுப்பினான். பொற்காசு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த உன் நண்பன் குதிரையை பெற்றுக் கொண்டு நாட்டைவிட்டே போய்விட்டான். இப்போது உன்னுடைய நண்பன் செல்வந்தன். உன்னுடைய புரிதலில் ஏற்பட்ட சிறிய தவறால் நீ இன்று பசியோடு இருக்கிறாய். இதை விதி என்பதா? அல்லது வாய்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் கோட்டைவிட்டாய் என்று சொல்வதா? ஒன்று மட்டும் நிச்சயம், உன்னுடைய வரம் உனக்கு சாபமாகவும், உன் நண்பனுக்கு வரமாகவும் மாறிவிட்டது', என்று சொல்லி முடித்தார் சாது.

அமைதியாக இருந்த அரசன் பேசினான்.

‘கவலைப்படாதே! நாளை உனக்கு உணவு, பொற்காசு, குதிரை ஆகிய எல்லாவற்றையும் மீண்டும் அனுப்பிவைக்கிறேன்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அரசன்.

அடுத்த நாள், அரசனின் வருகைக்காக காத்திருந்தான் பார்வையற்றவன். அரசன் வரவேயில்லை. முந்தய இரவே உடல் நிலை சரியில்லாத அரசன் இறந்து போன செய்தி இன்னமும் அவனுக்கு எட்டவில்லை.

‘வாய்ப்பு' என்பது எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்து கதவை தட்டுவதில்லை. அப்படியே சொல்லிவிட்டு வந்தாலும் அதை மிகச் சரியாக உபயோகப்படுத்திக்கொள்ளும் புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. ‘வாய்ப்பு' கதவைத் தட்டும் போது காதை பொத்திக்கொண்டால், பலன்கள் எப்படி கிடைக்கும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் மற்றொருவனிடம் சென்று தஞ்சமடையும்.

கால்பந்தாட்ட வீரர் காலி நிக் தன்னுடைய ஈகோவை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருந்தால், குரோஷியா இன்று கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும். தன்னுடைய திறமையின் மீது அதிக நம்பிக்கை இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், அது ஈகோவாக மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இத்தகைய ஒரு சூழல் மகாபாரதத்திலும் இருக்கிறது.

கர்ணன் போரில் அர்ஜுனனை எதிர்க்கிறான். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக கிருஷ்ணர் இருக்கிறார். கிருஷ்ணருக்கு இணையாக தேரோட்டுவதில் வல்லமை பெற்ற மகாராஜா சல்லியன் தனக்கு தேரோட்ட வேண்டும்', என்று துரியோதனனிடம் கேட்டுக் கொண்டான் கர்ணன். துரியோதனன் கேட்டுக் கொண்டதன் பேரில் கர்ணனுக்கு தேரோட்ட சம்மதித்தான் சல்லியன். சல்லியன் தேரோட்டியல்ல. பெரிய அரசன். ஒரு கட்டத்தில் அர்ஜுனன் மீது நாகாஸ்திரத்தை ஏவத் தயாரானான் கர்ணன். அர்ஜுனனின் மார்புக்கு குறி வைக்கும்படி யோசனை கூறினான் சல்லியன். சல்லியனை அவமதித்த கர்ணன், அர்ஜுனனின் தலைக்கு குறிவைத்தான். இலக்கு தப்பியது. கர்ணனின் ஈகோ மகாபாரத போரின் தலையெழுத்தையே மாற்றியது. கர்ணனுக்கு, அர்ஜுனனுடைய தலை மட்டுமே இலக்கா அல்லது அர்ஜுனனுடைய உயிர் இலக்கா என்பதை புரிந்துகொள்ள முடியாமல் போனதற்கு காரணம் கர்ணனின் ஈகோ. ‘சல்லியன் சொல்லிவிட்டான் அதை கேட்கக்கூடாது' என்ற ஒரே காரணத்திற்காக இலக்கை மார்பிலிருந்து தலைக்கு கர்ணன் மாற்றினானா என்பதும் நமக்குத் தெரியாது. மொத்தத்தில் கர்ணனனை ஈகோ ஆட்டிப்படைத்திருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது.

நாம் பார்த்த மூன்று நிகழ்வுகளிலும் தவறவிடப்பட்ட விஷயம் “வாய்ப்பு”.

தன் திறமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற வருத்தம் காலிநிக்கிற்கு. இது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நினைத்திருக்கலாம்.

தனக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு அடுத்தவருக்கு அருகதை கிடையாது என்று கர்ணன் நினைத்திருக்கலாம்.

‘தவறான புரிதல்' என்ற விஷயத்தில் பார்வையற்றவனும், காலிநிக்கும் ஒன்று. இருவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை மற்றவருக்கு தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

தவறான புரிதலும், ஈகோவும் நமக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்களை நாசமாக்கி நடுத்தெருவில் நிறுத்திவிடும். பொதுவான இலக்கை நோக்கி பயணிப்பவராக இருந்தால், அதாவது தம்மைச் சார்ந்தவர்களின் வெற்றிக்காக போராடுகிறோம் என்ற எண்ணமிருந்தால், கர்ணனும், காலிநிக்கும் ஈகோவை ஓரம்கட்டியிருப்பார்கள். பொதுவான இலக்கைவிட, சொந்த இலக்கே அவர்களுக்கு முக்கியமாக இருந்திருப்பது தெரிகிறது.

‘ஒரு அணியின் வெற்றிக்கு குறிப்பிட்ட ஒருவர், தானே காரணம் என்று நினைத்தால், அந்த சிந்தனை, அந்த அணியை அழிவை நோக்கி நகர்த்துகிறது என்று அர்த்தம். இதைத்தான் மேற்சொன்ன நிகழ்வுகள் நமக்கு புரியவைத்துள்ளது.

‘வாய்ப்பு' நம்மைத் தவறவிடுமானால் அது துரதிர்ஷ்டம். ‘வாய்ப்பை' நாம் தவறவிடுவோமேயானால், அது திமிர். தன்னுடைய திமிரினால் விளைந்த இழப்பை, ‘துரதிர்ஷ்டம்' என்று கணக்குப்போட்டால், அந்த சிந்தனையின் ஆழத்திலும் ஒரு ஈகோ ஒளிந்திருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஈகோவை விட்டொழிப்போம். புரிதலை சிறப்பாக்கிக் கொள்வோம். வாய்ப்புகளை நமதாக்கிக்கொள்வோம்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com