ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி. அத்தனை முதல்வர்களிடமும் காணக்கிடைக்காத ஒரு பெரும் தகுதி கருணாநிதியிடம் உண்டென்றால் அது அன்று முதல் இன்று வரை மாறாத அவரது தமிழ்ப்பற்று. தமிழுக்கு கருணாநிதி என்ன செய்தார்? தமிழ் கலாச்சாரத்துக்கு கருணாநிதி என்ன செய்தார்? என்று யாரேனும் கேட்டால் அவர்கள் கருணாநிதியைப் பற்றியும் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டைப் பற்றியும் ஒன்றும் அறியாதவர்கள் என்று அர்த்தம். அவருக்குத் தெரிந்தது மொத்தமும் அரசியல்வாதி கருணாநிதியை மட்டுமே!
கருணாநிதியின் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு ஆறாக் கோபம் இருக்கலாம். ஒரு தலைமுறை மொத்தமும் இந்தி கற்றுக் கொள்ள முடியாமல் மூளைச் சலவை செய்தவர் கருணாநிதி என்ற குற்றச்சாட்டு அவர் மீதிருந்த போதும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததில் தமிழ் மீது அவர் கொண்ட காதல் வெளிப்படுவதைக் காணலாம்.
கருணாநிதியின் தமிழார்வத்துக்கும், தமிழைக் கையாளத் தெரிந்த எழுத்து வன்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தவை என பராசக்தி, மனோகரா, பூம்புகார் திரைப்பட வசனங்களைக் குறிப்பிடலாம். அந்த வசனங்களைக் கேட்டு எழுச்சி கொள்ளாதோர் எவருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு கருணாநிதியின் தமிழில் அடுக்குமொழியும், கோபக்கனல் நெருப்பும், குறும்புமாக வசனங்கள் மாறி மாறி உணர்வுகளைச் சங்கமிக்கும்.