தேவை, மீள்பார்வை!

ஆரம்பத்தில் உணவும் வேளாண்மையும் ஒரே

ஆரம்பத்தில் உணவும் வேளாண்மையும் ஒரே அமைச்சகத்தின்கீழ்தான் இருந்து வந்தது. வேளாண் துறைக்கும் உணவுத் துறைக்கும் வெவ்வேறு அமைச்சகங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதால்தான்.
இந்தியாவைப் பொருத்தவரை உலகமயச் சுழலில் நாம் சிக்கிக்கொண்ட பிறகு வேளாண் துறை பல்வேறு சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச நிபந்தனைகளால் வேளாண் துறை பாதிக்கப்படுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பல விதிமுறைகள் நமது விவசாயிகளைப் பெரும் அவதிக்கு உள்ளாக்குகின்றன.
இந்தியாவின் ஒட்டுமொத்த குருமிளகு உற்பத்தியில் 98 விழுக்காடு தென்னிந்தியாவில்தான் விளைகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை ஒட்டியிருக்கும் கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்திருக்கும் பகுதிகளில்தான் குருமிளகு உற்பத்தியாகிறது.
குருமிளகு உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தனர். கிலோ ஒன்றுக்கு ரூ.650-ஆக இருந்த குருமிளகின் விலை, இந்த மாதம் முதல் வாரத்தில் ரூ.350-ஆக திடீரென்று சரிந்தது. சர்வதேசச் சந்தையில் விலை குறைந்ததோ அல்லது குருமிளகுக்கான கேட்புத் தேவை குறைந்ததோ அல்ல இதற்குக் காரணம். எந்தவித வரைமுறையும் இல்லாமல் தரம் குறைந்த குருமிளகு மிக அதிகமான அளவில் வியத்நாமிலிருந்து இலங்கை வழியாக இறக்குமதி செய்யப்பட்டதால்தான் இந்த விலைச் சரிவு.
குருமிளகு இறக்குமதிக்கு 70 விழுக்காடு கலால் வரி இந்தியாவில் விதிக்கப்படுகிறது. "ஆசியான்' ஒப்பந்தப்படி கிழக்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குருமிளகுக்கு 54 விழுக்காடுதான் கலால் வரி. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சில வர்த்தக ஒப்பந்தங்கள் இருக்கின்றன. அதன்படி இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் குருமிளகுக்கு 8 விழுக்காடுதான் கலால் வரி. இதை இறக்குமதியாளர்கள் பயன்படுத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்க முற்பட்டனர்.
வியத்நாமிலிருந்து இலங்கைக்குத் தரம் குறைந்த குருமிளகை இறக்குமதி செய்வதாகக் கணக்குக் காட்டி, கொழும்பு துறைமுகத்தில் அந்தக் குருமிளகைக் கப்பலில் இருந்து இறக்காமல் அப்படியே இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மறுவிற்பனை செய்துவிட்டனர். அதன் விளைவாக, இந்தியச் சந்தையில் தேவைக்கு அதிகமாகக் குருமிளகின் வரவு ஏற்பட்டதுதான் விலைச் சரிவுக்கான காரணம்.
தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள 12 குருமிளகு உற்பத்தியாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக்குழுவை அமைத்தனர். மிகப்பெரிய இழப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகள் வேளாண் அமைச்சகத்திடம் முறையிட்டும் எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை. வர்த்தகத் துறைதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தர முடியும் என்று கைவிரித்து விட்டது வேளாண் அமைச்சகம். குருமிளகு உற்பத்தியாளர்களின் கூட்டுக்குழு வர்த்தக அமைச்சர் சுரேஷ்பிரபுவைச் சந்தித்து தங்களது பிரச்னையை எடுத்துரைத்திருக்கிறார்கள். 
பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி இறக்குமதியாளர்கள் பெரும் லாபம் ஈட்டுகிறார்கள். குருமிளகு மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய பல வேளாண் உற்பத்தி பொருள்களும் உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் (ரபஞ) இந்தியா கையெழுத்திட்ட பிறகு இறக்குமதியால் பாதிக்கப்படுகின்றன. ரப்பர், ஏலம் உள்ளிட்ட மலைவிளைபொருள்களும் குருமிளகைப் போலவே பாதிக்கப்பட்டிருக்கின்றன. தாய்லாந்து, கௌதமாலா போன்ற நாடுகளில் இருந்து ரப்பரும், ஏலமும் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய விவசாயிகள், உற்பத்தி செய்யும் ரப்பருக்கும், ஏலத்துக்கும் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ்பிரபுவின் தலையீட்டினால் குருமிளகு உற்பத்தியாளர்களுக்குத் தாற்காலிக நிவாரணம் கிடைத்திருக்கிறது. இதுபோல ஒவ்வொரு முறையும் விவசாயிகள் அமைச்சர்களை நாடி நிவாரணத்துக்காக ஓடுவது என்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால், இந்தப் பிரச்னையை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதாமோகன்சிங் முதலிலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். குருமிளகு உற்பத்தியாளர்களின் பிரச்னையை அவரே வர்த்தகத் துறை அமைச்சரிடம் எடுத்துரைத்து தீர்வு கண்டிருக்க முடியும். அமைச்சர்கள் தனித்தனி தீவாக இந்திய நிர்வாக அமைப்பில் இயங்குகிறார்கள் என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்றால், நிலப் பயன்பாட்டுச் சட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் ஒரு சட்டம் போடப்பட்டிருக்கிறது. அதன்படி ரப்பர், தேயிலை, ஏலம், கொக்கோ, முந்திரி உள்ளிட்ட மலைவிளை பொருள்கள் மட்டும்தான் 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிட முடியும். அதாவது பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை 15 ஏக்கருக்கும் குறைவான சிறிய விவசாய நிலப்பரப்பில் மட்டுமே பயிரிட முடியும். இதுபோன்ற சட்டம் உலகில் வேறு எந்த நாட்டிலும் தொடர்வதாகத் தெரியவில்லை. 
விவசாய நிலப் பயன்பாடு குறித்து மீள்பார்வை பார்த்தாக வேண்டும். இறக்குமதி ஏற்றுமதிக் கொள்கைகள் எந்தவிதத்திலும் விவசாயிகளைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும். இதையெல்லாம் நமது ஆட்சியாளர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவல நிலையில் இந்திய ஜனநாயகம் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறதே, அதுதான் மிகப்பெரிய வேதனை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com