மிதாலி ராஜ் என்கிற சூப்பர் ஸ்டார்!

மகளிர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா

மகளிர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 186 ரன் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியிருப்பது குறித்து ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்படாததைப் பார்க்கும்போது உலக சாதனை புரிந்தாலும்கூட மகளிருக்கு போதிய அங்கீகாரத்தை இந்திய சமுதாயம் தருவதில்லை என்பது உறுதிப்படுகிறது. மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி. வரும் வியாழனன்று டெர்பியில் நடக்க இருக்கும் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்குமேயானால் மகளிர் உலகக் கோப்பையை நாம் கைப்பற்றுவோம்.
123 பந்துகளில் 109 ரன் எடுத்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் உலகக் கோப்பை பந்தயத்தில் அதிக ரன்களை (1,086) எடுத்த இந்தியர் என்ற சாதனையைப் புரிந்திருக்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராக ஏழு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை குவித்ததோடு, பின்னர் நியூஸிலாந்து அணியை 25.3 ஓவர்களில் வெறும் 79 ரன்களுக்கு சுருட்டியது. இதன்மூலம் 186 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.
இடது கை சுழற்பந்துவீச்சுக்காரரான ராஜேஸ்வரி கெய்க்வாட்டுக்கு இதுதான் மகளிர் உலகக் கோப்பையில் விளையாட கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு. அந்த முதல் வாய்ப்பை நழுவவிடாமல் வெறும் 15 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூஸிலாந்து அணியை 79 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்த சாதனையைப் புரிந்திருக்கிறார். இதுவரையில் மகளிர் உலகக் கோப்பை பந்தயத்தில் இந்திய வீராங்கனையின் மிகச்சிறந்த பந்துவீச்சு சாதனை இதுதான். அதேபோல, 45 பந்துகளில் 70 ரன்களை அடித்து இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வேதா கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டுக்குரியவர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்து வடநாட்டில் படித்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணான மிதாலி ராஜின் வரவுக்குப் பிறகுதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி புதிய வேகத்தைப் பெற்றது. கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணியின் பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.
6,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட் பந்தயத்தில் எட்டிப்பிடித்து சாதனை புரிந்திருக்கும் மிதாலி ராஜின் பிற சாதனைகள் ஏராளம். ஒருநாள் கிரிக்கெட் பந்தயத்தில் ஆறு சதங்கள், 49 அரை சதங்கள், 47 பந்தயங்களில் ஆட்டமிழக்காதது என்பது மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகப் பந்தயத்தில் சதமடித்த ஐந்து வீராங்கனைகளில் ஒருவர் என்கிற பெருமைக்கும் உரியவர் இவர்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி மிதாலி ராஜின் வளர்ச்சியுடன் இரண்டறக் கலந்தது. 1999-இல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலி ராஜ் விளையாட முற்பட்டபோது இந்த அளவுக்கு மகளிர் கிரிக்கெட் பிரபலமாக இருக்கவில்லை. அன்றைய மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்த அஞ்சும் சோப்ரா, நீது டேவிட் ஆகியோரும், அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த பூர்ணிமா ராவ், அஞ்சு ஜெயின், டயானா எடுல்ஜி, சாந்தா ரங்கசாமி உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகள் பலர் இருந்தாலும்கூட, அவர்களால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சர்வதேச அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, அனைவரது கவனத்தையும் கவரும் விதத்தில் உயர்த்த முடியவில்லை. சொல்லப்போனால், இந்திய மகளிர் கிரிக்கெட் மிதாலி ராஜுக்காக காத்திருந்தது.
2006-இல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் பந்தயத்தில் அடைந்த வெற்றிதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கே திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை நாங்களும் இருக்கிறோம் என்றிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததற்கு மிதாலி ராஜ் என்கிற நட்சத்திர மகளிர் கிரிக்கெட் வீராங்கனைதான் காரணம். இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச அடையாளமாகவே மாறிவிட்டிருக்கிறார் மிதாலி ராஜ். இந்திய கிரிக்கெட்டைப் பொருத்தவரை சுநீல் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களுக்கு எள்ளளவும் குறைவில்லாத சாதனை படைத்திருப்பவர் மிதாலி ராஜ் என்பதுதான் உண்மை.
மிதாலி ராஜின் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் பல இளம்வீராங்கனைகளை அடையாளம் கண்டிருக்கிறது. இந்திய மகளிர் அணியினரின் கனவு நாயகி, குருநாதர், நம்பிக்கைக்குரியவர் எல்லாமே மிதாலி ராஜ்தான். அவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் குரலாகவும் அடையாளமாகவும் மாறிவிட்டிருக்கிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற உலக சாதனை படைத்திருக்கும் மிதாலி ராஜுக்கும் சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்துவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு தரப்படும் முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் தரப்படுவதில்லையே, ஏன்? ஆடவர் கிரிக்கெட்டை ஒளிபரப்புவதுபோல, பரபரப்பான வர்ணனைகளுடனும் விதவிதமான ஒலிப்பதிவு நுணுக்கங்களுடனும் தொலைக்காட்சி சேனல்கள் இதனை ஒளிபரப்புவது இல்லையே ஏன்?
டென்னிஸிலும், பாட்மிண்டனிலும், ஜிம்னாஸ்டிக்கிலும் தனிநபர் பிரிவில் சாதனை படைக்கும் வீராங்கனைகளுக்கு தரப்படும் முக்கியத்துவம்கூட சர்வதேச சாதனை படைத்துக்கொண்டிருக்கும் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு கிடைப்பதில்லையே. கார்ப்பரேட் நிறுவனங்களில் காணப்படும் ஆணாதிக்கம்தான் மகளிர் கிரிக்கெட்டுக்கு புரவலர்கள் (ஸ்பான்சர்) அதிகமாக கிடைக்காமல் இருக்க காரணம் என்று தோன்றுகிறது. மிதாலி ராஜின் தலைமையில் உலகக் கோப்பை வெற்றி அமைந்தால், ஒருவேளை அந்த மனத்தடை உடையக்கூடும். எதிர்பார்ப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com