சிந்திக்க வைக்கும் வெற்றி!

நெதர்லாந்தின் 'தி ஹேக்' நகரில் செயல்பட்டுவரும்

நெதர்லாந்தின் 'தி ஹேக்' நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச நீதிமன்றத்திலுள்ள 15 நீதிபதிகளில் ஒருவராக கடந்த 2012 முதல் செயல்பட்டு வரும் தல்வீர் பண்டாரி, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வெற்றி. இதை இந்தியாவின் வெற்றி என்று கூறுவதைவிட, அணிசாரா நாடுகளின் வெற்றி என்றும் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சர்வதேச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் மாற்றப்படுவார்கள். ஐ.நா பொதுச்சபையில் உள்ள 193 உறுப்பினர் நாடுகளும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் வாக்களித்து அவர்களுக்குப் பதிலாகப் புதிதாக ஐந்து நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பர். ஐ.நா. பொதுச்சபையில் 97 உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும், பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள எட்டு உறுப்பு நாடுகளின் ஆதரவையும் பெற்றால்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு நீதிபதி போட்டியில் வெற்றிபெற முடியும். 
வழக்கத்திற்கு மாறாக இந்த முறை ஓய்வு பெறும் ஐந்து நீதிபதிகளுக்குப் பதிலாக நியமனம் பெற, போட்டியில் ஆறு வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதல் நான்கு வேட்பாளர்களும் பிரச்னை இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், ஐந்தாவது நீதிபதிக்கான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரியும், பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கிரீன்வுட்டும் இருந்தனர். இந்திய வேட்பாளர் நீதிபதி தல்வீர் பண்டாரி ஐ.நா. பொதுச்சபையில் பெரும்பான்மை வாக்குகளையும், பிரிட்டனின் கிறிஸ்டோபர் கிரீன்வுட் ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலில் பெரும்பான்மை வாக்குகளையும் பெற்றதால் பிரச்னை எழுந்தது. 11 சுற்று மறுதேர்தல் நடந்தும்கூட நிலைமை மாறவில்லை.
ஐ.நா. பொதுச்சபை உறுப்பினர்களில் மூன்று பேரும், பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களில் மூன்று பேரும் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழுவின் முடிவுக்குத் தேர்வை விட்டுவிடலாம் என்பதுதான் பிரிட்டனின் ஆலோசனை. இதற்கு முன்னால் இப்படியொரு வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதால், இந்தியா அந்த ஆலோசனையைக் கடுமையாக எதிர்த்தது.
இந்தியாவைப் பொருத்தவரை, ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும்கூட நமக்கு எதிராக பிரிட்டனை ஆதரிக்கத் தவறவில்லை. அதற்குக் காரணம், இதுவரை பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாட்டின் பிரதிநிதி, சர்வதேச நீதிமன்ற நீதிபதிக்கான தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதில்லை. அதனால், வல்லரசு நாடுகள் அனைத்தும் பிரிட்டனுக்கு ஆதரவாக செயல்பட்டதில் வியப்பில்லை.
இந்தியாவைப் பொருத்தவரை, ஐ.நா.வின் பொதுச்சபையில் உள்ள அத்தனை வளர்ச்சி அடையும் சிறிய, பெரிய நாடுகளின் ஆதரவும் கிடைத்தது. இதற்கு இந்தியா அனைத்து நாடுகளிடமும் நேசக்கரம் நீட்டி ஆதரவு கோரியதுதான் காரணம். வல்லரசு நாடுகள் எப்படி ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் நாட்டின் நீதிபதி வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை அளிக்க முற்பட்டனவோ, அதேபோல பெரும்பாலான ஐ.நா. பொதுச்சபை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க முற்பட்டன.
இந்தியாவுக்கும் சரி, பிரிட்டனுக்கும் சரி, சர்வதேச நீதிமன்றத்தில் இடம் பெறுவது என்பது ஒரு கெளரவப் பிரச்னையாக இருந்ததால், தங்களது அத்தனை ராஜீய தந்திரங்களையும் பயன்படுத்தத் தயங்கவில்லை. குறிப்பாக, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தல்வீர் பண்டாரியின் வெற்றியை இந்தியாவின் கெளரவப் பிரச்னையாகவே கருதிச் செயல்பட்டார்.
வேறு வழியில்லாமல் பிரிட்டன் தனது வேட்பாளரை விலக்கிக்கொண்டு இந்தியாவின் தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வு பெற வழிகோலியது. முதன்முறையாக, சர்வதேச நீதிமன்றத்தில் பிரிட்டனைச் சார்ந்த ஒருவர் நீதிபதியாக இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்ல, முதன்முறையாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் நாடு ஒன்று, சர்வதேச நீதிமன்றத்துக்கான தேர்தலில் தனது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாததால் பின்வாங்கி இருக்கிறது.
ஏற்கெனவை பிரிட்டன் பிரதமர் தெரஸா மேயின் தலைமைக்கு எதிராக ஆளும் கன்ஸர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், இந்தத் தோல்வி அவரை மேலும் பல
வீனப்படுத்துகிறது. சர்வதேச அளவில் பிரிட்டனின் மதிப்பு குறைந்து வருவதன் அடையாளமாகக்கூட இதை எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவைப் பொருத்தவரை, அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற முடியாமல் போன பின்னடைவை இந்த வெற்றி சமன் செய்கிறது.
உலக அளவில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட அத்தனை வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததிலும், ஏனைய வளர்ச்சி அடையும் நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக அணி திரண்டதிலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் தலைமையில் உருவாக்கிய அணிசாரா நாடுகளின் கூட்டமைப்பை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் அது. 
ஐ.நா. பொதுச்சபையில் ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பிலும் இந்தியா தனது ஆதரவை அதிகரித்து வந்தது ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை நிமிர்ந்து உட்காரச் செய்திருக்கிறது. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை இந்த வெற்றியின் அடிப்படையில் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com