அரசின் குற்றம்!

கடந்த வாரம் பல மாநில சந்தைகளில்

கடந்த வாரம் பல மாநில சந்தைகளில் வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50-ஐ தாண்டியது. மத்திய - மாநில அரசுகள் இப்போதுதான் விழித்துக்கொண்டு வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.
வெங்காயத்தின் விலை திடீரென்று இப்படி அதிகரிப்பது ஒன்றும் புதிதல்ல. ஓராண்டு விட்டு மறு ஆண்டு விலைவாசி உயர்வதும், சரிவதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இந்த ஆண்டின் வியப்பென்னவென்றால், கடந்த மே, ஜூன் மாதங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாகச் சரிந்து கிலோ ஒன்றுக்கு ரூ.2 என்கிற அளவுக்குக் குறைந்துவிட்டதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு அவர்களது ஆத்திரம் எல்லை கடந்தது. 
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, சிலர் இறக்கும் அளவுக்கு மத்தியப் பிரதேசத்தில் நிலைமை மோசமாகியது. பிரச்னையின் கடுமையைப் புரிந்துகொண்டு மத்தியப் பிரதேச முதல்வர் கிலோ ரூபாய் எட்டு என்று விவசாயிகளிடமிருந்து சுமார் 8.76 லட்சம் டன் வெங்காயத்தை வாங்க உத்தரவிட்டார். அந்த வெங்காயத்தை எல்லாம் சேமித்து வைக்க கிடங்குகள் இல்லாததால் பொது விநியோக நிலையங்கள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அவற்றை விற்று அழிக்க உத்தரவிட்டார். இதனால், மத்தியப் பிரதேச அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.785 கோடி.
அடுத்த சில மாதங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்கள் நெருங்குவதால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண விரும்பிய அரசு, வெங்காயத்தை இறக்குமதி செய்வதன் மூலம் அதன் விலையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதுபோல, வெங்
காயத்தை இறக்குமதி செய்வதும், வெங்காய ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதும், முற்றிலுமாக ஏற்றுமதிக்குத் தடை செய்வதும், எத்தனையோ முறை தோல்விகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 217 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். அதாவது, உலக உற்பத்தியில் சுமார் 20%.
டிசம்பர், ஜனவரியில் பயிரிட்டு, ஏப்ரல், மே மாதத்தில் அறுவடை செய்யப்படும் ராபி பருவத்தில்தான் ஏறத்தாழ 60% வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வெங்காயம்தான் விவசாயிகளாலும் மொத்த வியாபாரிகளாலும் சேமித்து வைக்கப்படுகிறது. காரீப் பருவத்தில் வெங்காயம் வரும் வரை உள்ளூர்த் தேவையையும் ஏற்றுமதியையும் ஈடுகட்டுவது ராபி பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம்தான். 
மே, ஜூன் மாதங்களில் பயிரிடப்பட்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுவது காரீப் பருவ வெங்காயம். ஆகஸ்ட், செப்டம்பரில் பயிரிட்டு ஜனவரி, பிப்ரவரியில் அறுவடை செய்யப்படுவது இரண்டாவது காரீப் பருவ உற்பத்தி. இவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கான மொத்த உற்பத்தியில் 20%-ஐ பூர்த்தி செய்கிறது. 
காரீப் பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தின் தரம் குறைவு என்பதால், அதிக நாள் சேமித்து வைக்க முடியாது. அக்டோபர், நவம்பர் ராபி பருவ வெங்காயத்தின் சேமிப்பு குறைந்து, காரீப் பருவ வெங்காயம் அறுவடை செய்யப்படாத நிலையில், வெங்காயத்தின் விலை உயர்கிறது. இந்த ஆண்டு காரீப் பருவ வெங்காயம் பெருமளவில் மழையால் அழிந்துவிட்டதால்தான், வெங்காயத்துக்குப் பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை வெங்காயத்தின் விலை அதிகரிப்பதும், தட்டுப்பாடு ஏற்படுவதும் சரியான திட்டமிடல் இருந்தால் நிச்சயமாக தடுக்கப்படக் கூடியவை. நமது வெங்காய உற்பத்திக்கு ஏற்றாற்போல, வெங்காயத்தை சேமித்து வைக்கும் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருப்பதுதான் வெங்காய விலையின் ஏற்ற இறக்கத்திற்கு மிக முக்கியமான காரணம். நமது பாரம்பரிய முறை வெங்காய சேமிப்பில் ஏறத்தாழ 40% வீணாகி விடுகின்றது என்பதால், நவீன சேமிப்பு முறைக்கு நாம் மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் 42,282 குறைந்த முதலீட்டு வெங்காய சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் 9.65 லட்சம் டன் சேமித்து வைக்கலாம். மத்தியப் பிரதேசத்தில் குறிப்பிடும்படியான சேமிப்புக் கிடங்குகள் இல்லை. இப்போதுதான் அது குறித்து அந்த மாநில அரசு சிந்திக்கவே தொடங்கியிருக்கிறது. ஆந்திரம், கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் ஓரளவுக்கு சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதில் வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் நமது தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. 
மேலும், வெங்காயத்திலிருந்து நீர்ச்சத்தை அகற்றும் தொழிற்சாலைகள் குஜராத்தைத் தவிர வேறு மாநிலங்களில் அதிகமாக இல்லை. ஜப்பான், ஐரோப்பா, ரஷியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு நீர்ச்சத்து எடுக்கப்பட்ட வெங்காயம்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனும் நிலையில், இதை ஊக்கப்படுத்தும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும். 
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வெங்காயம் குறித்த அரசின் வணிகக் கொள்கை விலை கட்டுப்பாட்டுக்கு மிக மிக முக்கியம். அதிக உற்பத்தி இருக்கும்போது ஏற்றுமதியை ஊக்குவிப்பதும், குறைந்த உற்பத்தியின்போது முன் யோசனையுடன் இறக்குமதிக்கு வழிகோலுவதும் அரசின் கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com