குற்றவாளியே சட்டமியற்றினால்...

நரேந்திர மோடி பிரதமராகப் பதவி

நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது, தனது அமைச்சரவையில் 75 வயதைக் கடந்தவர்களுக்கு இடமளிப்பதில்லை என்றும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடமளிப்பது என்றும் துணிந்து முடிவெடுத்தார். இதேபோல, 70 வயதானவர்களுக்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என்றும் அவர் முடிவெடுத்தால், அது சிறந்த முன்மாதிரியாக இருக்கும். 
அகவை 70-ஐக் கடந்தவர்கள் அதிகாரப் பொறுப்புகளில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுவதால், அவர்கள் அரசியலிலிருந்து விலகிவிட வேண்டும் என்பது பொருளல்ல. கட்சிப் பொறுப்புகளில் இருந்தபடி, அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுகொள்ள வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இதைவிட முக்கியமான பிரச்னை ஒன்று இப்போது எழுந்திருக்கிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டாலும்கூட நமது அரசியல்வாதிகள் பதவியைத் துறக்க விரும்புவதில்லை. இந்த அவலத்துக்கு உச்சநீதிமன்றம் 2013-இல் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டது. கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் உடனடியாகத் தங்கள் பதவியைத் துறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனடிப்படையில்தான், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சிலர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கிரிமினல் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் தொடர்வதில் தவறில்லை என்று கருதுவது வியப்பை அளிக்கிறது. அரசியல் தர்மங்களைத் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்பதில் ஏனைய கட்சிகளை விடவும் அதிகமாக அக்கறை காட்டும், குரலெழுப்பும் பாரதிய ஜனதா கட்சி இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
2004-க்குப் பிறகு, கிரிமினல் குற்றங்களுக்காக வழக்குகளை எதிர்கொள்ளும் மிக அதிகமான உறுப்பினர்கள் காணப்படுவது இப்போதைய 16-ஆவது நாடாளுமன்றத்தில்தான். கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் அரசுப் பதவிகளில் இருப்பதோ, சட்டம் இயற்றும் பொறுப்பில் இருப்பதோ மிகப்பெரிய ஜனநாயக முரண் என்று உச்சநீதிமன்றம் கூறியது வரவேற்புக்குரிய தீர்ப்பு. அதன் மூலம் மட்டுமே, குற்றப்பின்னணி உள்ளவர்களை அரசியலில் இருந்து சிறிதளவேனும் அகற்றி நிறுத்த முடியும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் 2013-ஆம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து இப்போது மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. கிரிமினல் குற்றங்களில் தவறிழைத்தவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டிக்கப்பட்டாலும், உடனடியாக அந்த உறுப்பினர்கள் பதவியைத் துறக்க வேண்டிய அவசியமில்லை என்பது மத்திய அரசின் வாதம். அந்த உறுப்பினர்களுக்கு, மேல்முறையீடு செய்யவும், தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் தண்டனைக்குத் தடை உத்தரவு பெறவும் உரிமை இருப்பதால், அவர்கள் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறது மத்திய அரசின் சட்ட அமைச்சகம்.
மத்திய அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பதாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. குற்றப்பின்னணி உள்ளவர்கள் பதவியில் தொடர்வதை அரசும், பாரதிய ஜனதா கட்சியும் ஏற்றுக் கொள்வதாகத்தான் இந்த மேல்முறையீட்டை நாம் பார்க்க வேண்டும். 
இப்போதைய 16-ஆவது மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மீது கிரிமினல் வழக்கு நடைபெற்று வருகிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. சிவசேனையின் 18 உறுப்பினர்களில் 15 பேரும், தேசியவாத காங்கிரஸின் 5 உறுப்பினர்களில் 4 பேரும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். பா.ஜ.க. உறுப்பினர்
களில் மூன்றில் ஒரு உறுப்பினர் மீதும், காங்கிரஸ் உறுப்பினர்களில் 18% பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களை எல்லாம் பாதுகாப்பதற்காகத்தான் மத்திய அரசு இந்த மேல்முறையீட்டை செய்திருக்கக்கூடும்.
எந்தவொரு இந்தியக் குடிமகனுக்கும் மேல்முறையீடு செய்யும் உரிமை உண்டு. மேல்முறையீட்டின் தீர்ப்புப் பெறக் கால தாமதம் ஏற்படும் என்பது உண்மைதான். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மேல்முறையீட்டுத் தடை பெறவும், தீர்ப்புப் பெறவும் காலதாமதம் ஏற்படுவதால், ஊதியம் தடைபடும் என்பதும் உண்மைதான். அதனால் மேல்முறையீட்டுக் காலத்தில் அவர்கள் பணிக்குச் செல்வது தடைபடக் கூடாது என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் நிலைமை அதுவல்லவே.
எல்லா குடிமக்களுக்கும் தரப்படும் மேல்முறையீட்டு உரிமையும், அந்த இடைப்பட்ட காலத்தில் பதவிப் பொறுப்புகளில் தொடரும் உரிமையும் அரசியல்வாதிகளுக்கும் தரப்பட வேண்டும் என்கிற அரசின் கோரிக்கையில் அர்த்தமில்லை. இதை அனுமதிப்பது என்பது, தேசத்தைக் குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழிநடத்துவதை நாம் அனுமதிப்பதாக அமைந்துவிடும்.
குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் பதவியில் தொடர்ந்தே தீர வேண்டும் என்று அரசு பிடிவாதம் பிடிக்குமானால், அரசுக்கு நாம் முன்வைக்கும் ஆலோசனை ஒன்று உண்டு. மேல்முறையீட்டில் தண்டனைக்குத் தடை பெறும்வரை, அந்த உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கோ, முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் தொடர்
வதற்கோ அனுமதிக்கப்படக் கூடாது. ஒருவேளை அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், இதைத் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com