கலாசாரம் மாறுகிறது!

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் 'மிகமிக முக்கியப் பிரமுகர்கள்'

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் 'மிகமிக முக்கியப் பிரமுகர்கள்' கலாசாரத்துக்கு ரயில்வே அமைச்சகம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ரயில்வே ஆணையத்தின் தலைவரும், ஆணைய உறுப்பினர்களும் எங்கே போனாலும் அவர்களை வரவேற்க மண்டல பொது மேலாளர்களும், மூத்த அதிகாரிகளும் காத்திருக்கும் நடைமுறைக்கு விடை கொடுக்கப்பட்டிருக்கிறது. 
இந்த முடிவுக்கு, இந்திய ரயில்வே ஆணையத்தின் தற்போதைய தலைவர் அஸ்வினி லோஹானிக்கு நாம் நன்றி கூற வேண்டும். சமீபத்தில் அவர் மும்பைக்குச் சென்றபோது அவரை வரவேற்க மும்பை விமான நிலையத்தில் மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் காத்திருந்தனர். இதைப் பார்த்து எரிச்சலடைந்த இந்திய ரயில்வே ஆணையத்தின் தலைவர் அஸ்வினி லோஹானி, இதுபோல மேலதிகாரிகளை வரவேற்கும் மரபுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பணித்தார். 
தாம் சொன்னதை செயல்படுத்தும் முயற்சியிலும் அவர் இறங்குவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரது பரிந்துரையை உடனடியாக ஏற்று, ரயில்வே அமைச்சர் ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகத்திற்கும வழக்கத்திலிருக்கும் தேவையில்லாத நெறிமுறைகள் பலவற்றை அகற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
1981-இல் ரயில்வே ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் இதுபோல மேலதிகாரிகள் வரும்போது, அந்த ரயில்வே மண்டலத்திலுள்ள மூத்த அதிகாரிகள் வரவேற்கும் கலாசாரம் ஆரம்பமானது. கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி ரயில்வே அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் புதிய உத்தரவின்படி, ரயில்வே நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
ரயில்வே ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரும்போது விமான, ரயில் நிலையங்களில் அவர்களை வரவேற்க அதிகாரிகள் செல்ல வேண்டும் என்கிற வழக்கம் கைவிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, எந்த ஒரு அதிகாரியும் பூங்கொத்து, அன்பளிப்பு உள்ளிட்டவைகளை எந்தக் காரணத்துக்காகவும் பெறுவது கூடாது என்றும் அந்த உத்தரவின் மூலம் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவு மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமோ, அவர்களது அலுவலக நிர்வாகச் செயல்பாடுகள் குறித்தது மட்டுமானதோ அல்ல, அவர்களுடைய தனிப்பட்ட முறை
யிலான இப்போதைய வாழ்க்கை முறைக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. எல்லா உயர் அதிகாரிகளும், பரவலாக ரயில்வேயின் கடைநிலை ஊழியர்களை, தங்கள் வீட்டு வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்பது பிரிட்டிஷார் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் நடைமுறை. இனிமேல் ரயில்வே ஊழியர்களைத் தங்கள் தனிப்பட்ட பணிக்காகவோ, தங்களது வீடுகளில் வேலைக்காகவோ பயன்படுத்துவது ரயில்வே அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ 30,000 கலாசி என்றழைக்கப்படும் கடைநிலை ஊழியர்கள் மூத்த ரயில்வே அதிகாரிகளின் இல்லங்களில் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். பலர் சமையல்காரர்களாகவும், தோட்டக்காரர்களாகவும், வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் உடனடியாக அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றுவதற்கு விடை கொடுத்துவிட்டு அன்றாட ரயில்வே பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது ரயில்வே நிர்வாகம். 
கடந்த ஒரு மாதத்தில் 7,000-க்கும் அதிகமான கடைநிலை ஊழியர்கள், அதிகாரிகளின் வீடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு அன்றாட ரயில்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தவிர்க்க முடியாத மிக முக்கியமான சூழலில் மட்டுமே ரயில்வே ஊழியர்கள் இனிமேல் அதிகாரிகளின் அன்றாட வீட்டுப் பணிக்குப் பயன்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 
அதேபோல, ரயில்வேயின் உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்னொரு வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார். உயர் அதிகாரிகள் பயணிப்பதற்காக எல்லா வசதிகளும் அடங்கிய 'சலூன்' என்றழைக்கப்படும் தனி ரயில் பெட்டிகளில் அல்லது முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்கும் தங்களது சலுகைகளைத் துறந்து, சாதாரணப் பயணிகளைப்போல இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி அல்லது மூன்றாம் வகுப்பு ஏசி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். இந்த உயரதிகாரிகளின் பட்டியலில் ரயில்வே ஆணையத்தின் உறுப்பினர்கள், ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்கள், ரயில்வே கோட்ட மேலாளர்கள் உள்ளிட்ட அனைவருமே அடங்குவர்.
இதற்கு முன் மிகமிக முக்கியப் பிரமுகர்களின் சிறப்புச் சலுகைகள் பலவற்றை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எதுவுமே இந்தியாவில் வெற்றி பெற்றதில்லை. உலகிலேயே அதிகமான மிகமிக முக்கியப் பிரமுகர்களைக் கொண்ட நாடு என்கிற பெருமை இந்தியாவிற்கு மட்டுமே உரித்தானது. பிரிட்டன் (85), பிரான்ஸ் (109), ஜப்பான் (125), ஜெர்மனி (142), ஆஸ்திரேலியா (205), அமெரிக்கா (252), ரஷியா (112), சீனா (345) ஆகிய நாடுகளை எல்லாம் மிக மிக பின்னுக்குத் தள்ளியபடி ஏறத்தாழ 5,80,000 மிகமிக முக்கியப் பிரமுகர்களைக் கொண்ட நாடாக இந்தியா காட்சியளிக்கிறது. 
மக்களாட்சி முறையில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் மிகமிக முக்கியப் பிரமுகர்களின் பட்டியல் குறைந்தபாடில்லை. அவர்களது சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரயில்வே அமைச்சகத்தின் முன்மாதிரி நடவடிக்கையை ஏனைய அமைச்சகங்களும், அரசியல் தலைவர்களும் பின்பற்றினால் இந்திய ஜனநாயகம் புதியதொரு பாதையில் பயணிக்கும் வாய்ப்பு இனியாவது ஏற்படும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com