நம்மை குப்பையாக்குகிறது குப்பை!

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், நகர்ப்புற ஊட்டச்சத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், நகர்ப்புற ஊட்டச்சத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வாழும் இந்தியர்களின் உடல் நலம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையும், என்ன காரணத்தால் நகர்ப்புற இந்தியர்கள் ஆரோக்கியம் இல்லாமல் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை வெளிச்சம் போடுகிறது.
 16 மாநிலங்களில் உள்ள வெவ்வேறு நகரங்களில் வாழும் 52,577 குடும்பங்களைச் சேர்ந்த 1,72,000 பேரைக் குறித்த எல்லா புள்ளிவிவரங்களையும், அவர்கள் உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் அந்த ஆய்வுக்காகத் துல்லியமாகத் திரட்டியிருக்கிறார்கள். பணக்காரர்கள், உயர் மத்திய வகுப்பினர், நடுத்தர வகுப்பினர், குடிசை அல்லது வீடுகளில் வாழும் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள், சொந்த வீடோ முகவரியோ இல்லாமல் வாழும் தெருவோரவாசிகள் என்று எல்லா தரப்பினரும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
 நடுத்தர வகுப்பினர், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்று இரண்டு பிரிவாக அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியான மேம்பாடு, உலகமயமாக்கலின் தாக்கம் ஆகியவை மத்தியதர வகுப்பினரை மிக அதிகமாக பாதித்திருப்பதால் இவர்களது உணவுப் பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, உடல் நலம் பேணல் என்பது புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 ரத்த அழுத்தம், நீரிழிவு, நுரையீரல் பாதிப்பு, குடல் புண் ஆகியவற்றால் மத்தியதரக் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு மிகமுக்கியமான காரணிகளாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் நலத்தைப் பாதிக்கும் உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இரவில் நீண்ட நேரம் கண் விழித்து வேலை பார்ப்பது, ஆங்காங்கே கிடைக்கும் குப்பை உணவுகளை அதிகமாக விரும்பி உண்பது, கோக கோலா, பெப்சி உள்ளிட்ட பானங்களை அருந்துவது ஆகியவை நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்திருப்பதுதான் அதற்குக் காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
 குப்பை உணவுகள் என்று குறிப்பிடப்படுபவை பரவலாக ஆங்காங்கே விற்பனை செய்யப்படும் பர்கர், பீட்சா, நூடுல்ஸ் உள்ளிட்டவை மட்டுமல்ல, துரித உணவுகள் என்கிற பெயரில் விற்பனையாகும் எல்லா பொருள்களுமே இதில் அடக்கம். அதற்குக் காரணம் அந்த உணவுகளில் எல்லாம் அதிகமானகொழுப்புச் சத்து காணப்படுவதும், உடல் நலத்துக்கு தேவையான புரதச்சத்து குறைவாக இருப்பதும்தான்.
 அதேபோல, துரித உணவுகள் பெரும்பாலும் மாமிச உணவாக இருப்பதாலும், அவை எண்ணெயில் பொறிக்கப்பட்டவையாக இருப்பதாலும், அளவுக்கு அதிகமான உப்பு சேர்க்கப்படுவதாலும், உடல் நலத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதுபோன்ற உணவுடன் அதிகமான சர்க்கரை சேர்க்கப்படும் குளிர்பானங்களையும் அருந்துவதால் உடல் நலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
 நகர்ப்புற வாழ் இந்தியர்கள் அளவுக்கு அதிகமான எடையுடன் காணப்படுவதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்கிறது அந்த அறிக்கை. இந்த உணவுகள் அனைத்துமே ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நேரடிக் காரணிகளாக அமைகின்றன. போதுமான உடற்பயிற்சி இருக்குமேயானால், இந்த குப்பை உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், நகர்ப்புற வாழ் மத்தியதர வகுப்பினர் அதிக தூரம் தங்கள் பணியிடத்துக்கு பயணிக்க வேண்டி இருப்பதால் உடற்பயிற்சிக்கு அவர்கள் விரும்பினாலும்கூட, நேரம் ஒதுக்க முடியாத சூழல் காணப்படுகிறது.
 அந்த அறிக்கையின்படி, இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் ரத்த அழுத்தம் (31% - 39%), நீரிழிவு (42%) காணப்படும் மாநிலங்கள் கேரளாவும், புதுச்சேரியும். இந்த இரண்டு மாநிலங்களிலும் மாமிச உணவு அன்றாட உணவுப் பழக்கமாக இருப்பதும், மது அருந்தும் பழக்கம் அதிகமாகக் காணப்படுவதும், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ரத்த அழுத்தமும், நீரிழிவும் காணப்படுவதற்கு காரணிகளாக இருக்கக்கூடும் என்கிறது அந்த அறிக்கை. புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் 60% மகளிரும், 42% ஆண்களும் தேவையைவிட மிக அதிகமான எடையுடன் காணப்படுகிறார்கள்.
 மாமிச உணவை தினசரி உணவுப் பழக்கமாக்கிக் கொண்டிருப்பதுடன் குழந்தைகளையும் அதேபோல தினசரி மாமிச பழக்கத்துக்கு பழக்கப்படுத்துவது மிகப்பெரிய உடல்நலக் கேட்டை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பது குறித்து பெற்றோர் கவலைப்படுவதில்லை. போதாக்குறைக்கு உணவு விடுதிகளுக்கு அவர்களை அழைத்துச்சென்று குப்பை உணவுகளையும் கேக், பாஸ்தா, பீட்சா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவையும் வாங்கிக் கொடுப்பதை பெற்றோர் பெருமிதமாகக் கருதுகிறார்கள். இதன்விளைவாகக் குழந்தைகள் இளம் வயதிலேயே உடல் பருமனுடனும் ரத்த அழுத்தத்துடனும் காணப்படுகிறார்கள். நடுத்தர வயதை எட்டுவதற்கு முன்னால் இன்றைய பல இளைஞர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
 புத்திசாலித்தனமும் திறமையும் உள்ள இளைஞர் கூட்டம் இந்தியாவில் உருவாகிறது என்பதில் மட்டுமே பெருமையில்லை, ஆரோக்கியமானவர்களாகவும் அவர்கள் இருந்தால் மட்டுமே, வீட்டுக்கும் நாட்டுக்கும் அவர்களால் நன்மை!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com