இலங்கைக் குழப்பம்!

இலங்கையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டுமே தோல்வியைத் தழுவி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின்

இலங்கையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டுமே தோல்வியைத் தழுவி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆதரவுடனான ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி பெரும் வெற்றியடைந்திருக்கிறது. அதனால், இலங்கையில் மீண்டும் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 
அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து 2015-இல் ஆட்சியமைத்தபோது, இலங்கை புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்துவந்தது. மகிந்த ராஜபட்சவின் தலைமையில் ஏறத்தாழ ஒரு சர்வாதிகார ஆட்சியாகவே இருந்து வந்த இலங்கையில் அரசமைப்பு அமைப்புகள் முடங்கிக் கிடந்தன. மீண்டும் சுதந்திரத்தையும் அரசமைப்பு அமைப்புகளின் அதிகாரங்களையும் மீட்டெடுப்போம் என்கிற உறுதிமொழியுடன்தான் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியமைத்தது. 2015-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறீசேனா, மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக வெற்றி பெற்றதும், அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறீசேனா - விக்ரமசிங்க கூட்டணி வெற்றி பெற்றதும் மாற்றத்திற்காக இலங்கை மக்கள் அளித்த வாக்கு என்பதை மறந்துவிடக் கூடாது. 
அதுவரை எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தாலும்கூட, ஆரம்பம் முதலே அவர்களுக்கிடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை. உள்ளாட்சிக் கவுன்சிலுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் இருந்தும்கூட, தனித் தனியாகப் போட்டியிட முடிவெடுத்ததுதான் இப்போது தற்கொலை முயற்சியாக முடிந்திருக்கிறது. 
உள்ளாட்சிக் கவுன்சில் பிரசாரத்தின்போது, அதிபர் சிறீசேனா, பிரதமர் விக்ரமசிங்க ஆகியோரின் கட்சிகள் உள்ளாட்சிக் கவுன்சில் தேர்தலில் வெற்றிபெற்றால் அதன் விளைவாக மீண்டும் தமிழீழம் கோரிக்கை எழுப்பப்படும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச வலியுறுத்தியது கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. ஆனால், அவரது பிரசாரம் தென் இலங்கையைச் சார்ந்த சிங்களர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் அதன் விளைவாக, ராஜபட்சவின் ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா மக்கள் கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 
ராஜபட்சவின் ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி, உள்ளாட்சிக் கவுன்சில் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது என்றால், விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீசேனாவின் சுதந்திரக் கட்சியும் இரண்டாவது மூன்றாவது இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது. அதன் விளைவாக மீண்டும் அதிபர் ராஜபட்சவுக்கு இலங்கையில் ஆதரவு அதிகரித்து வருவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. 
அரசியலில் இதுபோன்ற தோற்றங்கள் வலுப்பெறக் கூடும் என்பது உண்மைதான் என்றாலும், உள்ளாட்சிக் கவுன்சில் தேர்தல் முடிவுகள் மக்களின் மனமாற்றத்துக்கான அறிகுறி என்று கூறிவிட முடியாது. ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி பெற்றிருக்கும் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் மொத்த வாக்குகளைவிடக் குறைவாகவே காணப்படுகிறது. 2015-இல் அதிபர் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இப்போது தனித்தனியாக போட்டியிட்டன என்பதை மறந்துவிடக் கூடாது.
உள்ளாட்சிக் கவுன்சில் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆளும் கூட்டணியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பலர் பிரதமர் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கூட்டணியில் இருந்து விலகித் தனியாகவே ஆட்சி அமைத்தால் என்ன என்கிற எண்ண ஓட்டத்துக்கு மாறியிருக்கிறார்கள். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 106 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தனிப்பெரும்பான்மை அடைய இன்னும் ஏழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் போதும் என்கிற நிலையில், அதற்கான முயற்சியில் களமிறங்கி இருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி. 
43 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 52 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற முன்னாள் அதிபர் ராஜபட்சவுடன் ரகசியத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கவை அகற்றிவிட்டு ஆட்சியமைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதைத் தெரிந்துகொண்டதால் இப்போது சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இறங்கிவந்திருப்பது மட்டுமல்லாமல், இருதரப்பும் அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
அதிபர் சிறீசேனாவும், பிரதமர் விக்ரமசிங்கவும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து, 2015-இல் மக்கள் அவர்களது கூட்டணி மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும். உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முழு உரிமைகளுடனான மறுவாழ்வும், வட கிழக்கு மாகாணங்களின் மாநில உரிமைகளுக்கான உத்தரவாதமும் தரப்படும் என்கிற அவர்களது உறுதிமொழிதான் 2015-இல் வெற்றியைத் தேடித்தந்து அவர்களைஆட்சியில் அமர்த்தின என்பதை மறந்துவிடக் கூடாது. அவர்கள் இருவரும் தங்களது கடமையில் தவறினால் 'மீண்டும் ராஜபட்ச' என்பது கேள்விக்குறியாக இல்லாமல், ஆச்சரியக் குறியாக மாறிவிடக் கூடும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com