உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜகவைப் பொருத்தவரை, மத்திய - மாநில ஆட்சிகளின் மீது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடுதான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியாவும் 2014-இல் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதிகளில் பாஜக தோற்கடிக்கப்பட்டிருப்பது, யாருமே எதிர்பார்த்திராத அதிரடி தேர்தல் திருப்பம். பாஜகவின் கோட்டை என்று கருதப்படும் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் கடந்த 1998 முதல் ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர் இப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேச முதல்வரானதைத் தொடர்ந்து தனது மக்களவை உறுப்பினர் பதவியை அவர் துறந்ததால், கோரக்பூர் இடைத்தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அதேபோல, கேசவ் பிரசாத் மெளரியா துணை முதல்வரானதால், புல்பூர் மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
கடந்த 2014-இல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற கோரக்பூர் தொகுதியை இப்போது 29,000 வாக்குகள் வித்தியாசத்திலும், கடந்த முறை 3.2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புல்பூர் தொகுதியை 59,613 வாக்கு வித்தியாசத்திலும் சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக பறிகொடுத்து தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பல காரணங்கள் முன் வைக்கப்பட்டாலும்கூட, பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கூறுவதுபோல இது எதிர்பாராத தோல்வி என்பது மட்டும் நிஜமல்ல.
இதற்கு முன்னால் நடந்த உத்தரப் பிரதேச மாநகராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற பாஜக, உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது பரவலாக வெளியில் தெரியவில்லை. ஏற்கெனவே இருந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான் இடைத்தேர்தல் தோல்விகள் என்பது பாஜக தலைமைக்கு நன்றாகவே தெரியும். இடைத்தேர்தலில் பின்னடைவு நேரிடும் என்பதை பாஜக எதிர்பார்த்ததால்தான், இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தன. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோதே, நடந்திருக்க வேண்டிய இடைத்தேர்தல்கள் இவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மாயாவதியின் அரசியல் சாதுர்யத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்று பல அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அரசியல் சாதுர்யம் என்பதைவிட, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர்வதைத் தனது பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒப்புக்கொள்வார்களா என்பதை சோதித்துப் பார்க்கும் களமாக, இந்தத் இடைத்தேர்தல்களை மாயாவதி பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கொள்ளலாம். அரசியல் ரீதியாக இரு பிரிவினரும் இணைய முடியாது என்கிற பாஜகவின் அரசியல் கணக்கைப் பொய்யாக்கி இருக்கிறது கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தல் முடிவுகள்.
பொது எதிரியான பாஜகவை வீழ்த்துவதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை அளித்த மாயாவதி, இதேபோல அடுத்து வர இருக்கும் 2019 மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைக்க முன்வருவாரா என்கிற கேள்விக்கு இப்போதே விடையளித்துவிட முடியாது. தனது ஆதரவு இல்லாமல் சமாஜ்வாதி கட்சியால் உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துவிட்ட மாயாவதியின் நிபந்தனைகள் கடுமையாகவே இருக்கக்கூடும் என்பதை அகிலேஷ் யாதவ் உணராமல் இருக்க மாட்டார்.
உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளால் மகிழ்ச்சி அடைய முடியாமல் இருப்பது பாஜக மட்டுமல்ல, காங்கிரஸும்தான். காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்ட கோரக்பூர், புல்பூர் இரண்டு தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்திருக்கும் அவலம், பாஜகவின் தோல்வியால் வெளியில் தெரியாமல் மறைந்து விட்டிருக்கிறது. புல்பூர் தொகுதி பண்டித ஜவாஹர்லால் நேருவை, அவர் பிரசாரத்துக்குச் செல்லாமலேயே தொடர்ந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிகாரில் நடந்த அராரியா மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் குறைந்திருக்கிறது என்றாலும்கூட, லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் வெற்றி பெற்றுத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஜெகானாபாத் சட்டப்பேரவைத் தொகுதியையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் பிரிந்துவிட்ட நிலையிலும், லாலு பிரசாத் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அரசியல் சக்தியாக வலம் வருகிறது என்பதன் அடையாளமாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களில் தனது செல்வாக்கை நிலைநாட்டிவிட்ட மகிழ்ச்சியில் வலம் வந்து கொண்டிருந்த பாஜகவுக்கு, உத்தரப் பிரதேசம், பிகார் இடைத்தேர்தல்கள் மிகப்பெரிய பின்னடைவு. 2017-க்குப் பிறகு நடந்திருக்கும் அமிருதசரஸ், ஸ்ரீநகர், மலைப்புரம், குர்தாஸ்பூர், ஆஜ்மீர், அல்வர், உலுபெரியா, கோரக்பூர், புல்பூர், அராரியா ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் பாஜக தோல்வியடைந்திருக்கிறது. இன்னும் 15 மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக கவலைப்பட்டாக வேண்டும்!