இணைப்புக் கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச. 14) நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
வர்தா புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் புதன் அல்லது வியாழக்கிழமைகளில்தான் மின் விநியோகம் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புயலால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இணைப்புக் கல்லூரிகளுக்கு புதன்கிழமை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இதற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறினார்.