புதுச்சேரி: புதுச்சேரி சென்டாக் உயிரியில் பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 26-ஆம் தேதிக்கு பதிலாக 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட உயிரியல் பாடப்பிரிவுக்கான முதற்கட்ட சென்டாக் கலந்தாய்வு கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வ கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கி 27ம் தேதி வரையும் நடந்தது.
இந்நிலையில் உயிரியல் பாடப்பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 26, 27 ஆகிய தேதிகளிலும், பி.பார்ம் பாடப்பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 28-ஆம் தேதியும் நடைபெறும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.
28-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இறுதிக் கட்ட கலந்தாய்வு 28-ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என சென்டாக் தெரிவித்துள்ளது.
அதன்படி, 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு எஸ்சி பிரிவு மாணவர்களுக்கும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 200 முதல் 160 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்து பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து 29-ஆம் தேதி 159.833 முதல் 120.666 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
இதைத் தொடர்ந்து, 30-ஆம் தேதி காலை 8.45 மணிக்கு ஏனாம் பகுதியை சேர்ந்த எஸ்சி பிரிவு மாணவர்களுக்கும், 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 198 முதல் 141 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்து பிரிவினருக்கான பி.பார்ம் கலந்தாய்வு நடக்கிறது.
மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை www.centaconline.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண் வரம்புக்குள் வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் மற்றும் ஒரு செட் நகல் சான்றிதழ்கள் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நாள் நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் கலந்தாய்வில் பங்கேற்கும் எஸ்சி மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் ரூ.300க்கும், இதர பிரிவினர் ரூ.750க்கான வரைவோலையை The Convenor, CENTAC என்ற பெயரில் புதுச்சேரியில் செலுத்தத்தக்க வகையில் கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.