பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் சனிக்கிழமை (ஆக.5) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் -ஜூலை மாதங்களில் நடந்த பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பம் செய்தவர்கள் சனிக்கிழமை (ஆக.5) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முற்பகல் 1 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தேர்வெழுதியவர்களின் பதிவெண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாளின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறு கூட்டலுக்கு ஆக.7-இல் விண்ணப்பிக்கலாம்: விடைத்தாளின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து வரும் 7 -ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 9 -ஆம் தேதி (புதன்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.