கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தகுதித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.11) முதல் விண்ணப்பிக்கலாம் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பைப் பெறுவதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
நிகழாண்டுக்கான 'நெட்' தேர்வு நவம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு சி.பி.எஸ்.இ. இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனஅறிவித்த சி.பி.எஸ்.இ., பின்னர் பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்கும் தேதியை ஒத்திவைத்தது.
இந்தத் தேர்வுக்கு இப்போது வெள்ளிக்கிழமை (ஆக.11) முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசித் தேதி. 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.