சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் 2018-2019-ஆம் கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம் என்று துணைவேந்தர் பி.துரைசாமி கூறினார்.
சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 7-வது ஊதியக்குழு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 91 துறைகள் மூலம் முதுகலை படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. அந்தந்த துறை விருப்பப்படி ஆன்லைனில் யாரும் எங்கிருந்தும் படிக்கலாம். வேலைவாய்ப்பை கருதி இந்த வசதி கொண்டு வரப்படுகிறது. மேலும் வரும் கல்வி ஆண்டு (2018-2019) முதல் அமல்படுத்தப்படுகிறது எனவும் சிண்டிகேட்டில் இதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வழக்கம்போல நேரடியாக படிக்கலாம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.