நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு இடையே சிற்றுண்டிகளை சாப்பிடுவதற்கு சிபிஎஸ்இ அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ரத்தத்தில் சக்கரை குளுக்கோஸின் அளவை நிலையாக வைத்திருப்பதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் இன்சுலின் ஊசிப் போட வேண்டியது அவசியம். இந்த மாணவர்கள், ரத்த சக்கரைக் குறைவை தவிர்ப்பதற்கு தொடர்ந்து உணவருந்த வேண்டியதும் அவசியம். அவ்வாறு சாப்பிடவில்லையெனில், அவர்களது செயல்பாட்டுத் திறன் பாதிக்கப்படும்.
எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள், தேர்வு எழுதும் கூடங்களுக்கு வரும்போது, சர்க்கரை நோய் மாத்திரைகள், பழங்கள், பிஸ்கெட் போன்ற சிற்றுண்டிகள் போன்றவற்றை கொண்டு வரலாம்.
மாணவர்களிண் உடல்நிலை குறித்த மருத்துவரின் அறிக்கை, சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரால் சிபிஎஸ்இ-க்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.