தமிழ்ப் பல்கலை. - மலேசிய பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆசிரியர் - மாணவர் பரிமாற்றம் தொடர்பாக, தமிழ்ப் பல்கலைக்கழகமும், மலேசியாவில் உள்ள எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், மலேசிய எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தெரிவித்தது:
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஆசிரியர் - மாணவர் பரிமாற்றம், இணையக் கல்வியைப் பரிமாறிக் கொள்ளுதல், இந்தியப் பண்பாட்டு மையத்தைத் தொடங்கி, அதன்மூலம் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய
கண்காணிப்பாளர் சு. செந்தமிழ்ச்செல்வி, உதவியாளர்கள் நா. ராமகிருஷ்ணன், த. ராஜராஜன், அச்சுப்பொறி பேணுநர் மு. ஜான் பால்ராஜ் ஆகியோருக்கு துணைவேந்தர் ரூ. 2,000 ரொக்கமும், சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார். மேலும் 10 நூல்களும் வெளியிடப்பட்டன.
சுவாமி ஓங்காரனந்தா, எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவிச்சந்திரன், இங்கிலாந்து லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் ஜெயராஜ், பிரான்ஸ் தமிழறிஞர் சாம் விஜய், தஞ்சாவூர் நேஷனல் பார்மா மருத்துவமனை நிறுவனர் எல். கமால்பாட்சா, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் எஸ். பிரதீபா, பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன் ஆகியோருக்கு குடியரசு நாள் பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் கராத்தே பயன்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய அளவில் சிறந்த பேராசிரியருக்கான விருது பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் ச. சிவசுப்பிரமணியம் கெளரவிக்கப்பட்டார்.
விழாவில், பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.