நீட் தகுதித் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மட்டுமே தேர்ச்சி: கல்வியாளர்கள் அதிர்ச்சி

நீட் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தகுதித் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மட்டுமே தேர்ச்சி: கல்வியாளர்கள் அதிர்ச்சி

நீட் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பாடப் பிரிவுகளுக்தத் தேசியத் தகுதித் தேர்வு (நீட்) மூலம் தான் சேர்க்கையை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு நடைபெற்றது. மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இத்தகுதித் தேர்வை நடத்தியது. வினாக்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன.

தமிழக அரசின் மாநிலப் பாடத் திட்டத்தின்படி, புதுவையிலும் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனால், புதுவை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் சேருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் 5 ஆண்டுகளுக்கு நீட் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

இதையடுத்து, புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள பள்ளிக் கல்வித்துறை சார்பில் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக வார விடுமுறை நாள்களிலும், இரண்டாம் கட்டமாக கோடை விடுமுறையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

240 மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி: குறிப்பாக, கோடை விடுமுறை நாள்களில் புதுச்சேரியில் 120 பேர், காரைக்காலில் 120 பேர் என மொத்தம் 240 மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், இயற்பியல், வேதியியல் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாமல் திணறியதாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

30 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி: இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி நீட் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின. புதுச்சேரியில் மொத்தம் 4,196 பேர் தேர்வு எழுதினர். இதில், 1,586 பேர் (37.79 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.

குறிப்பாக, கல்வித்துறை சார்பில் நீட் பயிற்சி பெற்ற 240 பேரில் 30 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். புதுச்சேரி பிராந்தியத்தில் 19 பேரும், காரைக்காலில் 11 பேரும் இதில் அடங்குவர்.

கனவாகும் மருத்துவக் கல்வி: புதுவையில் நிகழ் கல்வியாண்டு அரசு மருத்துவக் கல்லூரி, மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறப்படும் இடங்கள் மட்டும் சென்டாக் மூலம் நிரப்பப்படும். கடந்தாண்டைப் போல நிகர்நிலை மருத்துவப் பல்கலை. இடங்கள் புதுவை மாணவர்களுக்கு கிடைக்காது. இதனால், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு கடந்தாண்டை விட, நிகழ் கல்வியாண்டு குறைவாகவே இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், புதுவையில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 545 முதல் 300 வரையும், தனியார் பள்ளி மாணவர்கள் 400 முதல் 200 வரையும் நீட் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் 200-க்கும் குறைவான மதிப்பெண்களே பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், அவர்கள் மற்ற மாணவர்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படுவதால், நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்காது. இதனால், அவர்களது மருத்துவக் கனவு முற்றிலுமாகத் தகர்ந்துள்ளது.

எனவே, அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் தமிழகத்தைப் போல, புதுவையிலும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தகுதித் தேர்வை எதிர்கொள்வது சற்று சிரமமான விஷயம்தான்.

தனியார் பள்ளி மாணவர்களைப் போல, அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகக் கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்புக்குச் செல்ல முடியாது.

இதையறிந்துதான் கடந்த முறை மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும், குறைந்த நாள்களே பயிற்சி அளிக்கப்பட்டதால், அவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்த முடியவில்லை. எனவே, நிகழ் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்பில் இருந்தே நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் விரைவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com