ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்- 2017 (ஜிஎஸ்டி) குறித்த டிப்ளமோ படிப்பு வணிகவியல் துறையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எதிர்ப்புகள் மற்றும் வரவேற்புகளுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தில் நான்கு முறையிலான வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி குறித்து தெரிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வமாக உள்ளதால், வணிகவியல் துறையின் கீழ் ஜிஎஸ்டி குறித்த டிப்ளமோ படிப்புகள் விரைவில் அமல்படுத்த இருப்பதாக தில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், அறிவியல் துறையின் கீழ் இணைய குற்றங்களை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சைபர் சட்டங்கள் குறித்த முதுகலை டிப்ளமோ படிப்பு வரப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட டிப்ளமோ படிப்புகளில் கல்வியாண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் யோகேஷ் தியாகி தெரிவித்துள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.