பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் 89 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின்னர், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் 24 புதிய உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்தக் கல்லூரிகளில் 4 முதல் 5 பாடப் பிரிவுகள் மட்டுமே இப்போது உள்ளன. இந்தக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் 89 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.
பொறியியல் மாணவர்களிடையே ஆசிரியர் பணி, ஆராய்ச்சி மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பொறியியல் முதுநிலை பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற 19 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு, ரூ.2.94 கோடி செலவில் தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் சார்பாக தொழில்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின், மாணவர்கள் ஆராய்ச்சி திட்டத்துக்கான நிதி ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.
அதுபோல, இளம் மாணவ அறிவியலாளர்கள் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படும் என்பன உள்பட 13 புதிய அறிவிப்புகளை உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டார்.