முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேட்டி: முதுநிலை மருத்துவ மாணவர் கலந்தாய்வில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இம்முறையும் பின்பற்றப்பட்டது. நீதிமன்றங்களில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பையும், இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளையும் பின்பற்றியே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. விதிகளின்படிதான் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீத மதிப்பெண் வழங்கப்பட்டது.
எனவே, மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றார்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், 1747 கிராமப்புற சுகாதார நிலையங்களை தொலைதூர இடங்கள் என்றும், அணுகுவதற்கு சிரமமான இடங்கள் என்றும் வகைப்படுத்தி உள்ளது சரியான நடைமுறைதான்.
அரசு மருத்துவர்களுக்கு இதுபோன்ற சலுகைகளை அளிப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது. எனவே, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்பட்ட நடைமுறை சரியானதுதான் என்று தெரிவித்தனர்.