பொதுத் தேர்வுக்கு பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் திருத்தம் செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் பி.கருணாகரன். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன். ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டு விட்டனர். நான் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும்போது எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டு விட்டேன். அதன்பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கில், 1992-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பெற்றேன்.
குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ஆம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச் சான்றிதழை பெற்றேன். இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித் தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் மனு செய்தேன். ஆனால் பிறந்த தேதியை திருத்தம் செய்து தர தேர்வுத்துறை செயலாளர் மறுக்கிறார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியைக் குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
விதிகளில் இடமில்லை: இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. விதிகள், பிரிவு 5-ன் படி, வயது மற்றும் பெயர்களில் ஏதாவது திருத்தம் இருந்தால், அந்த திருத்தத்தை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பே செய்து விட வேண்டும். தேர்வுக்கு பின்னர், திருத்தங்களை செய்ய முடியாது என்று விதி, தெளிவாக கூறுகிறது.
எனவே, மனுதாரரின் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது.
மேலும், பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வு துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும், குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தன்னுடைய பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, இந்த வழக்கை ஏற்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com