ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் பாடப் பிரிவுகளுக்கான நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் திங்கள்கிழமை தொடங்கியது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு ஆண்டுதோறும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். வருகிற மே மாதம் 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தமுள்ள 200 இடங்களில் புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்களும். காரைக்கால் கிளைக்கு 50 இடங்களும் உள்ளன.
புதுவையில் உள்ள 150 இடங்களில் 50 இடங்கள் பொதுப் பிரிவுக்கும், 28 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், 16 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், 11 இடங்கள் பழங்குடியினருக்கும், 40 இடங்கள் புதுவை மாநிலத்துக்கும், 5 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
காரைக்காலில் உள்ள 50 இடங்களில் 15 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 10 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும், 6 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், 4 இடங்கள் பழங்குடியினருக்கும், 14 இடங்கள் புதுவையை சேர்ந்தவர்களுக்கும், ஒரு இடம் வெளிநாடு வாழ் இந்தியருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுவை, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூர் உள்பட 75 நகரங்களில் 270 மையங்களில் ஜூன் 4-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும். ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வு எழுத முடியும்.
காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஒரு பிரிவாகவும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை ஒரு பிரிவாகவும் 2 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். இதில், 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் அளிக்கப்படும். இதன்படி 800 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். இதில், வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின்னர் சேர்த்து கொள்ளப்படுவர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் கூறுகையில், ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். கடந்தாண்டு விண்ணப்பித்த 1.55 லட்சம் பேரில் 1.35 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நிகழாண்டு 2 லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கிறோம் என்றார்.