நாளை நீட் தேர்வு: நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான 'நீட்' பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெறுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
நாளை நீட் தேர்வு: நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான 'நீட்' பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெறுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் 'நீட்' பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அவசரச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே கடந்த கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
விலக்கு இல்லை- மத்திய அரசு உறுதி: இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் இரண்டு சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர மறுத்தது. மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
நாளை தேர்வு: இதனையடுத்து நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 103 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே தேர்வுகள் நடைபெற உள்ளன.
10 மொழிகளில் தேர்வு: ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டில் இருந்து உருது மொழியிலும் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
மதிப்பீடு எவ்வாறு?: ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடைபெறும். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். அதே சமயம், தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் (Negative marking). . ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும், அது தவறான பதிலாகவே கருதப்படும்.
ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இடஒதுக்கீடு பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் மூன்று முறையும், பிற மாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் நீட் தேர்வை எழுத முடியும்.
தேர்வு நேரம்: ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 7.30 மணிக்குத் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அனுமதி கிடையாது: செல்லிடப்பேசி, கைக்கடிகாரங்கள், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென் டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட எவ்விதமான எலெக்ட்ரானிக் பொருள்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. மேலும் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபவதற்கான தாள்கள் உள்ளிட்டவையும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருள்களைத் தேர்வு அறைக்குள் வைத்திருந்தாலே, அதனை உபயோகித்ததாகக் கருதி அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எதையெல்லாம் கொண்டு செல்லலாம்?: மாணவர்கள் தேர்வு அறைக்குள் தேர்வுக்கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் அனுமதி அட்டையின் இரண்டாவது பக்கத்தில் ஒட்ட வேண்டிய அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வை நீல நிறம் அல்லது கருப்பு நிற பால் பாயின்ட் பேனாவைக் கொண்டே எழுத வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பேனா தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும்.
தீவிரக் கண்காணிப்பு: நீட் தேர்வில் பிற மாநிலங்களில் முறைகேடுகள் நடைபெறுதாக ஏற்கெனவே புகார்கள் எழுந்துள்ளதாலும், முறைகேடுகள் கண்டறியப்பட்டு, மறுதேர்வு நடைபெற்றதாலும், தேர்வு அறைகளில் தீவிரக் கண்காணிப்பு நடைபெறும். மாணவர்களின் உடை, செருப்பு முதல் அனைத்தும் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு எதற்காக?: நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.
புடவை அணியத் தடை!
நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் ஷூ, முழுக்கை சட்டை, டி - சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ் உள்ளிட்ட அனைத்து விதமான ஆபரணங்கள், தலையில் அணியும் கிளிப்புகள், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள், புடவை, வளையல்கள், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா ஆகியவை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரைக்கை சட்டை, செருப்பு, கால்சட்டை (பேன்ட்), ஜீன்ஸ் கால்சட்டை, மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேன்ட் ஆகியவற்றுக்கு மட்டுமே தேர்வுக்கூடத்துக்குள் அனுமதி உண்டு. திருமணமான பெண்கள் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com