திருச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு 10-ம் வகுப்பு பயின்றவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4 பேர் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
திருச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் குழந்தை தொழிலாளர்களை இனம்கண்டு மீட்டு 24 மையங்கள் மூலம் அவர்களுக்கு கல்வி மற்றும் தங்குமிடம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் 23 பேர் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவில் 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட (சியர்ஸ்) இயக்குநர் பியர்லின் செல்வகுமார் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் 23 பேர் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 12 பேர் மாணவிகள். இதில் கொடியாம்பாளையத்தில் உள்ள ஒரு பட்டறையிலிருந்து மீட்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் துறையூர் தனியார் பள்ளியில் படித்த மாணவர்,
அரங்கூர் பகுதியில் ஒரு சோதிட நிலையத்தில் உதவியாளராக பணியாற்றிய மாணவி, திருச்சி உறையூர் பகுதியில் வீட்டு வேலை பார்த்த ஒரு மாணவர், பள்ளக்காடு பகுதியில் வீட்டுவேலை பார்த்துவந்த மாணவி ஆகியோர் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.