கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான (நெட்) தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.
கல்லூரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும் மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. வெளியிட்ட செய்தி:
நெட் தேர்வில் பங்கேற்க 9.30 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 91 நகரங்களில் 1,700 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கு கூடுதலாக 25 நிமிடங்களும், தாள்-3 தேர்வுக்கு கூடுதலாக 50 நிமிடங்களும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.