அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள முதுநிலை மருத்துவர்களுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கக் கோரி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முதுநிலை மருத்துவ மாணவர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 500 முதுநிலை மருத்துவர்களுக்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இந்தப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கக் கோரி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பை இன்னும் 4 மாதங்களில் முடிக்க உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்தனர். அப்போது அங்கு குழுமிய முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது கலந்தாய்வு முன்னுரிமை கோரிக்கை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மனு அளித்து, எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும்படி வலியுறுத்தினர். இதை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்க மறுத்துவிட்டார்.