பாட்னா: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 98-வது வயதில் பொருளாதார பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் வைசியா என்பவர் கடந்த 1938-ஆம் ஆண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடரமுடியாமல் போனது. தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிய ராஜ்குமார் 1980-ல் ஓய்வு பெற்றார்.
பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற வேண்டும் என்பது அந்த இளைஞரின் நீண்ட நாள் கனவு, ஆசையாக இருந்துள்ளது.
இதையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு, பாட்னாவில் உள்ள நாலந்தா திறந்தவெளி பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை அந்த பல்கலைகழகம் ஏற்றுக்கொண்டதையடுத்து அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
அவர் தற்போது எம்.ஏ பொருளாதாரத்தில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் என நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டு பட்டம் பெற்றுள்ளார். தனது 98-வது வயதில் முதுகலை பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த அந்த இளைஞர், வறுமை ஒழிப்பு குறித்து கவிதை எழுத இருப்பதாகக் கூறியுள்ளார்.
தள்ளாத வயதிலும், கல்வித்துறையில் ராஜ்குமார் வைசியா சாதனை படைத்திருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தான் முதுகலை படிப்பதற்கு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்களான தனது மகன், மருமளும் தான் காரணம் என பெருமையாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இக்கால இளைஞர்களுக்கும் அவரது விடா முயற்சி பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.