இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 396 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 859 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு 6,938 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில், இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இதுவரை நடைபெறவில்லை.
இதுதொடர்பாக இந்தியமுறை மருத்துவ தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியது:
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதிப் பட்டியலும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்லூரிகளுக்கு வழங்கும் அனுமதி மற்றும் கலந்தாய்வு நடத்துவதற்கு தமிழக அரசின் அனுமதி ஆகியவற்றுக்காக காத்திருக்கிறோம். அனுமதி பெற்ற பின்னர் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும். சரியான கலந்தாய்வு தேதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.