நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் பாராமெடிக்கல் செவிலியர் பயிற்சி நிறுவனத்துக்கு மருத்துவத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 'சீல்' வைத்தனர்.
இதனால், இப்பயிற்சி நிறுவனத்தில் பயின்றுவரும் 33 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யத்தில் தாமரை பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் என்ற தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து பயணியர் மாளிகை சாலை பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கட்டட வளாகம் அருகே உள்ள வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்தது. இந்நிலையில், இந்த நிறுவனம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, மருத்துவ அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதியை புதுப்பிக்காமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நிறுவனத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.