எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வில் 12,683 இடங்கள் நிரம்பியுள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் நடத்துகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
கலந்தாய்வின் முடிவில் நாடு முழுவதும் 12,683 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடங்களைப் பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் ஜூன் 23 -ஆம் தேதியிலிருந்து ஜூலை 3 -ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் ஜூலை 6 -ஆம் தேதி தொடங்க உள்ளன. ஜூலை 10,11 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும்.
தமிழகத்தில் எப்போது?: இந்தப் படிப்புகளுக்கான மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
பங்கேற்க முடியாது:அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்று, தமிழக ஒதுக்கீட்டின்கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற விரும்பும் மாணவர்கள், அகில இந்திய இடங்களைக் கைவிட்ட பின்னரே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். அகில இந்திய இடங்களைக் கைவிடாதவர்கள் தமிழக ஒதுக்கீட்டின்கீழ் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.