புதுதில்லி: முப்படைகளில் அதிகாரிகள், வீரர்கள் உள்பட 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், ராணுவத்தில் அதிகபட்சமாக 27 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன், மக்களவையில் புதன்கிழமை கூறியதாவது:
ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 9,259 அதிகாரி காலிப் பணியிடங்களும், அதிகாரி அந்தஸ்துக்கு கீழ் 50,363 காலிப் பணியிடங்களும் உள்ளன. இதில், ராணுவத்தில் அதிகபட்சமாக சுமார் 27 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, ராணுவத்தில் 12.37 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், ராணுவத்தில் மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 12.64 லட்சமாகும். 27,864 இடங்கள் காலியாக உள்ளன.
தற்போது 67,228 பணியாளர்களைக் கொண்டிருக்கும் கடற்படையில் 16,255 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, விமானப் படையில் அங்கீகரிக்கப்பட்ட 1.55 லட்சம் பணியிடங்களில் 15,503 இடங்கள் காலியாக உள்ளன. முப்படைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்ய தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.