6140 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 6,140 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது.
6140 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 6,140 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வு எழுதுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக காவல் துறையில் ஆயுதப் படையில் 5,538 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடத்துக்கும், சிறைத் துறையில் 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடத்துக்கும், தீயணைப்புத் துறையில் 216 தீயணைப்போர் பணியிடத்துக்கும், 46 பின்னடைவு பணியிடத்துக்கும் சேர்த்து மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வு எழுத விண்ணப்பிப்போர், www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மையத்தை 044-40016200, 28413658, 94990 08445, 91762 43899, 97890 35725 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதேபோல மாநிலம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் தனித்தனியாக உதவி மையங்கள் செயல்படும். இந்த தேர்வு எழுதுவதற்கு ரூ.130 கட்டணமாகும்.

இக்கட்டணத்தை நெட்பேங்கிங், பற்று அட்டை, கடன் அட்டை அல்லது இணையவழியில்லாமல் அஞ்சலகங்கள் (e-payment post offices)  ஆகியவற்றின் மூலம் மட்டும் செலுத்தலாம். அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு ஜனவரி 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

காவலர் தேர்வில், எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்களும், என்.சி.சி., என்.எஸ்.எஸ்.,விளையாட்டு ஆகிய சான்றிதழ்களுக்கு 5 சிறப்பு மதிப்பெண்களும் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வில் பொது அறிவு பாடத் திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகளும், உளவியல் பாடத் திட்டத்தில் இருந்து 30 மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். 

எழுத்துத் தேர்வில் 28 மதிப்பெண்கள் பெற்றாலும், தேர்ச்சிபெறும் அனைவரும் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்த காலிப் பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்புவாரி விகிதாச்சாரப்படி 1:5 விண்ணப்பதாரர்கள் மட்டும் அடுத்தக் கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடல் திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com