திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்று உள்ள ஆண், பெண் இருபாலருக்குமான வேலைவாய்ப்பு முகாம், அம்பத்தூர் பெருந்தலைவர் காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 18) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு அளிக்க உள்ளனர். 5-ஆம் வகுப்பு முதல் பட்டம், பட்டயப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைக்கு ஏற்ற நல்ல வேலை வாய்ப்பினை பெறலாம்.
வயது, கல்வித்தகுதி உள்ளிட்ட உரிய சான்றிதழ்களுடன் இதில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட திட்ட மேலாளரை (புதுவாழ்வு திட்டம்) 044 27665252, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநரை 044-27664528 என்ற தொலைபேசி எண்களிலும், 9445034210, 9445034211, 9445034212 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.