திருச்சி: இந்திய விமானப் படையில் ஏர்மேன் பதவிக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருச்சியில் மே 20, 22-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின்(சென்னை) பாதுகாப்புப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பதவிக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மே 20, 22-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த முகாமில் இந்திய குடியுரிமை உள்ள திருமணமாகாத 1997, ஜூலை 7ஆம் தேதிக்குப் பிறகு 2000, டிசம்பர் 20ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
பிளஸ் 2 முடித்த, இண்டர்மீடியட், அதற்கு இணையான தகுதி கொண்ட தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்க தகுதி உடையவர்கள். பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
முகாமில் பங்கேற்பவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மதிப்பெண், தேர்ச்சி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களாக இருந்து, அவர்களின் உண்மை மதிப்பெண் சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ் கல்லூரிகளில் இருப்பின் கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட மதிப்பெண், தேர்ச்சி சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மதுரை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மே 20ஆம் தேதி நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.
வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தருமபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மே 22-ஆம் தேதி நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம். இவ்விரு நாள்களிலும் காலை 6 மணிமுதல் 10 மணி வரை ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும்.
மேலும் விவரங்களை www.airmenselection.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். அல்லது 044-22390561, 22395553 (இணைப்பு-7833) என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இணையம் வழியாக co.8asc-tn@gov.in என்ற முகவரிக்கு இ.மெயிலும் செய்யலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.