மதுரை: போட்டித் தேர்வு வினாத் தாள்களை முன்கூட்டியே தருவதாகக் கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) எம்.ராஜாராம் கூறினார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் பெற்றவர்களில், தமிழை முதன்மை மொழிப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான தேர்வை அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனியாக நடத்தும். இதன்படி தென் மாவட்டங்களில் நியமனம் பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) எம்.ராஜாராம் இத் தேர்வை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழக அரசில் நியமனம் பெறும் அலுவலக உதவியாளர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும். மதுரையில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களும் 42 பேர் வாய்மொழித் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில், செவ்வாய்க்கிழமை நடந்த தேர்வில் 28 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 26 பேர் பங்கேற்றுள்ளனர்.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் வினாத் தாள்களைத் தருவதாகக் கூறி, சிலர் பணம் பறிக்கின்றனர். அத்தகைய நபர்களிடம் தேர்வுக்குத் தயாராகி வருவோர் ஏமாற வேண்டாம். ஏனெனில், வினாத்தாள் எங்கு தயாரிக்கப்படுகிறது, எங்கு அச்சடிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் தேர்வாணயை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் பழைய வினாத் தாள்களையே புதிதாக அச்சடித்து, ஏமாற்றிவிடுகின்றனர். இத்தகைய நபர்கள் குறித்து தேர்வாணையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.