குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்சவரம்பை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் எஸ்.ஸ்வர்ணா பிறப்பித்த உத்தரவு: டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் பங்கேற்போரின் வயதை நிர்ணயித்து கடந்த 1995 ஜனவரியில் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30 என்றும், எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோருக்கு 35 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பேரவை அறிவிப்பு: இது தொடர்பாக வயது உச்ச வரம்பை உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள உச்சவரம்பைப் போன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 1ஏ, 1பி பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35-இல் இருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30-ல் இருந்து 32-ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
அரசு உத்தரவு விவரம்: அந்த அறிவிப்பின் அடிப்படையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. இது தொடர்பான திருத்தங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தில் தனியாகச் செய்யப்படும்.