புதுச்சேரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று புதுவை தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் யமாஹா மோட்டார் நிறுவனம் நேர்முகத் தேர்வு நடத்துகிறது.
தேர்வில் சென்னையில் அமைந்துள்ள 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18 முதல் 22 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் 18 முதல் 26 வயது நிரம்பிய ஐடிஐ, டிப்ளமோ (மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், புரோடெக்ஷன், இஇஇ, இசிஇ) கல்வித் தகுதி கொண்ட நபர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
பணியில் சேருபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.11 ஆயிரம் மற்றும் இஎஸ்ஐ, இபிஎஸ் வழங்கப்படும். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது சுயகுறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் மார்ச் 10-ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரை பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.