குரூப் 2ஏ தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
இது குறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2ஏ பிரிவில் காலியாக இருந்த 1,953 காலியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 5.56 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, தேர்வு எழுதியோரின் மதிப்பெண் மற்றும் தரவரிசை ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகியனவும் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித் தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.