குரூப் -4 தொகுதியில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 22 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வின் முடிவுகள் கடந்த 2015 மே மாதம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
மேலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 22 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் மூலமும், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.