குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 -ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் ஜூனில் வெளியானது.
ஏற்கெனவே முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வரும் 17 -ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி, நேரம் ஆகிய தகவல்கள் அடங்கிய அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த கலந்தாய்வுக்கு வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.