தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெற்றி பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் ம.பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வப் பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
போட்டித் தேர்வுகளில் பங்கு பெற தேவையான பல்வேறு புத்தகங்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் பத்திரிகைகள் அடங்கிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில், தமிழ்நாடு அரசு தேர்வாணயம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக வரும் (ஜன.20) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் அலுவலக வேலை நாளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி தங்களது விருப்பக் கடிதத்தினை சமர்ப்பித்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 04575-240435 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.