வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைப் பெற வேலூர் மாவட்ட இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்புமின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடப்புக் காலாண்டுக்கு பயன்பெற 2012 அக்டோபர் 1 முதல் 2012 டிசம்பர் 31-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளான பட்டதாரிகள், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2 தேர்ச்சி பெறாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் இரண்டாம், மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதி மொழிப்படிவத்தை அளிக்க வேண்டும். அவ்வாறு உறுதிமொழிப் படிவம் அளிக்காதவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும். மேலும், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்புப் பதிவு அட்டையை உரிய காலத்தில் புதுப்பித்து வர வேண்டும்.