நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள தலைவர் பணியிடங்கள் இரண்டு வாரத்தில் நிரப்பப்பட்டுவிடும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை "கன்ஸ்சியூமர் வாய்ஸ்' என்ற அமைப்பின் செயலாளர் லோகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவை, நாமக்கல், நாகை, வேலூர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்திலும், கடந்த ஆண்டு மே மாதம் முதல் தலைவர் பணியிடம் காலியாக உள்ளது. சுமார் 10,450 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படாமலும், 8,245 வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.
மத்திய அரசு நுகர்வோர் சமரச தீர்வு மையங்களை அமைக்க ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்தி, நுகர்வோர் சமரச தீர்வு மையங்களை அமைக்கவும், தமிழக முழுவதும் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு, புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஆஜராகி, காலியாக உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் தலைவர் பணியிடங்கள் இரண்டு வாரத்தில் நிரப்பப்படும் என்று உறுதியளித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையின்போது அதுதொடர்பான அறிவிப்பை தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.