ஐஐடி வளாகத் தேர்வு: முதல் நாளில் 99 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னை ஐஐடி வளாகத் தேர்வின் முதல் நாளில்17 நிறுவனங்கள் பங்கேற்று 99 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:
சென்னை ஐஐடி-யில் 2017 -18-ஆம் ஆண்டுக்கான வளாகத் தேர்வு வெள்ளிக்கிழமை (டிச.1) தொடங்கியது. முதல் நாளில் பிற்பகல்2 மணி வரை நடைபெற்ற முதல் பிரிவில் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், சாம்சங் ஆராய்ச்சி நிறுவனம், உபேர், டால்பெர்க் ஆலோசனை நிறுவனம் உள்பட 17 நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர் தேர்வை நடத்தின.
தேர்வில் பங்கேற்ற ஐஐடி மாணவர்களுக்கு இந்த நிறுவனங்கள் 99 வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன. டிசம்பர் 10 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 1,100 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தனியாக வளாகத் தேர்வு நடத்தி, 6 வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கியது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகமாகும். 2016 -17-ஆம் கல்வியாண்டில் முதல் நாள் முதல் பிரிவில் 71 வேலைவாய்ப்புகளுக்கான உத்தரவுகளை மட்டுமே சென்னை ஐஐடி மாணவர்கள் பெற்றிருந்தனர் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.