மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே, ‘மகா சிவராத்திரி’ என்று கொண்டாடப்படுகிறது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான், உலக உயிர்களை படைத்ததும், தனக்குள் ஐக்கியப்படுத்தியதும் இந்த நாளில்தான் என்கிறது புராணங்கள். இதனை ‘லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ என்கிறது சாஸ்திரங்கள். ‘லயம்’ என்றால் ஒடுக்குதல், ‘ஸ்ருஷ்டி’ என்றால் படைத்தல் என்று பொருள். அதாவது படைத்தலுக்கும், அழித்தலுக்கும் ஆதாரமான இறைவனுக்கான விழாவே 'மகா சிவராத்திரி'.