ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில் 10ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் என்பது அறியமுடிகிறது. கோயிலைச் சுற்றி அருமையான 10, 11ம் நூற்றாண்டு நாகக்கன்னி, லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நாக கன்னி இயல்பாக அமர்ந்திருக்கும் கோலம். பிரம்மன் பூசித்த பெருமையுடையது. நாக கன்னி பூசித்து பேறு பெற்ற தலமாகவும் உள்ளது. நாக தோஷமுடையோர் வணங்கி தோஷ பரிகாரம் செய்து கொள்ளலாம். அடுத்தாற்போல் தட்சணாமூர்த்தி தென்புறம் நோக்கியபடி உள்ளதை காணலாம். அகன்று விரிந்த முகப்பு மண்டபத்துடன் கூடிய துவிதள கருவறை. சில படிகள் ஏறி சென்றால், உள்ளே பெரிய அகன்ற வடிவ பிரம்மநந்தீஸ்வரர் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார். தென்முகம் நோக்கி அம்பிகை காட்சியளிக்கிறார். இக்கோவிலுக்கு செல்ல பட்டீஸ்வரம் உள்ள பெரிய கோயிலின் வடக்கு வீதியில் தொடர்ந்து மேற்கு நோக்கி சென்றால் இரும்பு ஆர்ச் ஒன்று இடது புறம் காணலாம். இக்கோயில் சுதையில் செய்யப்பட்ட செங்கற்றளி கோயில். புனரமைப்பு பணிகள் ஏதும் நடைபெற வில்லை அதனால் அதன் பழமை மாறாமல் உள்ளது. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்