தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை இன்று 378வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை என அழைக்கப்படும் மதராஸ் நகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வந்தோரை வாழ வைத்த தமிழகத்தின் தலைநகரான சென்னையின் வரலாறு மிகவும் பழமையானது. தென்னிந்தியாவின் வாசலான சென்னை ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று மாற்றப்பட்டுள்ளது. 1835ல் சென்னை மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டது. 1871ல் சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1876ல் சென்னை துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. 1888ல் இந்தியாவின் முதல் கிரிக்கெட் கிளப்பான மதராஸ் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1900ல் மூர்மார்க்கெட் திறக்கப்பட்டது. 1913ல் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் திறக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.